Spiders: தங்களுடைய வலைகளையே சாப்பிடும் சிலந்திகள்; அறிவியல் சொல்லும் காரணம் தெரி...
``தேச-தெய்வீக பக்தன் எடப்பாடி பாஜக-வுடன் கூட்டணி வைத்ததில் என்ன தவறு?'' - ராஜேந்திர பாலாஜி
`விஜய பிரபாகரன் தோல்விக்கு காரணம்'
விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த சிவகாசி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க வாக்குச் சாவடி நிலை முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசி வடக்கு ஒன்றியப் பகுதியில் வாக்காளர்களுக்கு வாகன வசதிகளை நாம் செய்து கொடுக்காமல் விட்டதால் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் பதிவாகாமல் போனதே தே.மு.தி.க வேட்பாளர் விஜயபிரபாகரனின் தோல்விக்கு காரணம்.
அந்த 7 ஆயிரம் வாக்குகள் பதிவாகியிருந்தால், 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருப்பார். இதன் மூலம் வெற்றியை நாமே கையில் இருந்தும் இழந்துவிட்டோம்.

வெற்றியை எங்கு தவறவிட்டோம் எனக் கண்காணிக்கும் போது, இது எனது கண்ணுக்கு வெளிச்சமாகத் தெரிந்தது - சிவகாசி வடக்கு ஒன்றியத்தில் நமக்குக் கிடைக்க வேண்டிய 7 ஆயிரம் வாக்குகள் பதிவாகாததே முக்கிய காரணம்.
50 ஆயிரம் முதல் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற மமதையில் இருந்துவிட்டோம். அப்படிப்பட்ட எண்ணத்தில் எப்போதும் இருக்கக் கூடாது என்பதற்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு ஒரு பெரிய படிப்பினையாகும்.
நாம் மிகவும் கவனமாக இருந்திருந்தால் தம்பி விஜயபிரபாகரன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றிருப்பார்; அவரை டெல்லிக்கு அனுப்பி வைத்த பெருமையையும் நாம் பெற்றிருப்போம். எனவே, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
`எவ்வளவுதான் பொறுமை காக்க முடியும்?'
அ.தி.மு.க-வில் பிரச்னை ஆரம்பித்த மூன்று ஆண்டுகளாக கட்சிக்குள்ளிருந்து கொண்டு தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தால், எவ்வளவுதான் மனிதன் தாக்குப்பிடிக்க முடியும்? தொடர்ந்து கட்சிக்கு நெருக்கடி கொடுத்தவர்களையே எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். எவ்வளவுதான் பொறுமை காக்க முடியும்?

அ.தி.மு.க இயக்கத்தை அழிக்க நினைத்து, தலைமைக்கு சவால் விடுபவர்களோடும் சேர்ந்து கொண்டு ‘இயக்கத்தின் ஒற்றுமைக்காக பாடுபடுகிறோம்’ எனச் சொல்லினால் யார் ஏற்றுக் கொள்வார்?” என செங்கோட்டையனை மறைமுகமாக விமர்சித்தார்.
“கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தவறு செய்தது போல பொய்யான வதந்தியை பரப்புபவர்களை தட்டிக்கேட்கும் தளபதிகளாக நாம் இருக்க வேண்டும்; அதை காட்டிக்கொடுக்கும் பணியை செய்தால் தலைமை எப்படி பொறுத்துக் கொண்டிருக்கும்?” என்றார்.
`அதிமுக ஒரு தேசபக்தி உள்ள இயக்கம்'
அதனைத் தொடர்ந்து விருதுநகரில் நடந்த வாக்குச் சாவடி நிலைய முகவர் பயிற்சிக் கூட்டத்தில் பேசிய அவர்,
“மத்திய அரசுக்கு யார் அடிமை? எதை எதிர்க்க வேண்டுமோ அதை தயங்காமல் எதிர்க்கக்கூடியவர் எடப்பாடி. அ.தி.மு.க ஒரு தேசபக்தி உள்ள இயக்கம்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பா.ஜ.க-வுடன் எடப்பாடி கூட்டணி வைத்துள்ளார். பா.ஜ.க-வுடன் தேச-தெய்வீக பக்தன் இபிஎஸ் கூட்டணி வைத்ததில் எந்தத் தவறும் இல்லை. இந்த கூட்டணி ஆன்மீக பலம் கொண்டது. இதில் குழப்பத்தை உருவாக்கி குளிர்காய எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர்.

சிறுபான்மை மக்களை தூண்டிவிட்டு, ‘எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார்’ என்று தி.மு.க-வினர் கூறுகின்றனர். தமிழகத்தின் வாழ்வாதாரம், தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க மத்திய அரசுடன் இணக்கமாக சென்றோம்.”
“பா.ஜ.க-வில் உள்ளவர்கள் என்ன வெளிநாட்டினரா? நமது சகோதர்கள், நண்பர்கள். இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் அனைவரும் நமது சகோதரர்களே. எனவே தி.மு.க-வின் சதி செயலை முறியடித்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க தான் போட்டியிடும்; ‘கூட்டணிக்கு போய்விடும்’ என யாரும் பயப்பட வேண்டாம். இது வெற்றி பெறக்கூடிய தொகுதி. எனவே இந்த தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்று வரலாற்றை உருவாக்குவோம்” என அவர் பேசினார்.

















