``மதுரைக்கும், கோவைக்கும் NO METRO; இப்படி பழிவாங்குவதா!" - பாஜக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின்
மதுரை மற்றும் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ள தமிழக அரசு, அதற்கான திட்ட விரிவாக்க அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது.
இவ்வாறிருக்க மத்திய அரசு, மேலும் விரிவான திட்ட அறிக்கையைக் கேட்டு அதனைத் திருப்பியனுப்பியிருக்கிறது.
மேலும், இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய பா.ஜ.க அரசு புறக்கணிக்கிறதென்று தெரிவித்திருக்கிறார்.
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஸ்டாலின், `` 'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க-வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு.
'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 19, 2025
அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு.… pic.twitter.com/PEoQKCBMRY
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல.
கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

















