``என் கணவர் உனக்கு; உன் கணவர் எனக்கு...!" - நீதிபதிகளை தலைச்சுற்ற வைத்த சகோதரிகள...
மயானமே மணமேடையான வினோதம்! - `டெஸ்டினேஷன் வெடிங்' என்ற பெயரில் கலாசார மீறலா?
இன்றைய காலகட்டத்தில் தங்களின் திருமணத்தை உலகமே திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில், பல மணமக்கள் மிகவும் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் நடத்த வேண்டும் என்பதற்காக 'டெஸ்டினேஷன் வெடிங்' செய்ய விரும்புகின்றனர். ஓர் அழகான கடற்கரையோ அல்லது மலைப்பிரதேசமோ திருமண மண்டபமாக மாறுவது வழக்கம் தான், ஆனால் உத்தரகாண்ட் மாநிலத்தில் காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி, ஒரு மயானத்தையே தங்கள் மணமேடையாக மாற்றிய விசித்திரச் சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இந்த திருமணத்திற்காக உத்தரகாண்டின் அல்மோரா மாவட்டத்தில் உள்ள மார்ச்சுலா என்ற பகுதியில், ஒரு பழைமையான மயானத்தை அந்த ஜோடி தேர்ந்தெடுத்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட உறவினர்களுடன், மாலை மாற்றும் சடங்கிற்காக அந்தச் சுடுகாட்டையே ஒரு தற்காலிகத் திருமண மண்டபம் போல மலர்களாலும் விளக்குகளாலும் அலங்கரித்துள்ளனர். வழக்கமாக அமைதி நிலவவும் அந்த இடத்தில், உரத்த இசையுடன் திருமணக் கொண்டாட்டங்கள் அரங்கேறியது, அங்கிருந்த உள்ளூர் மக்களின் கலாசார உணர்வுகளைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது.
இந்தத் திருமண ஏற்பாடுகளைச் செய்த நிர்வாகம், அது ஒரு மயானம் என்றும் அங்கு மங்கலச் சடங்குகள் செய்வது முறையல்ல என்றும் மணமக்களிடம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. இருப்பினும், மணமக்களின் பிடிவாதத்தால் இந்தத் திருமணம் நடந்துள்ளது. மேலும், அந்த மயானத்தை ஒட்டி ஒரு ஏரி அமைந்துள்ள நிலையில், அங்கு முதலைகள் நடமாட்டம் அதிகம் உள்ள அபாயகரமான பகுதி என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அந்தப் பாதுகாப்பு விதிகளை முற்றிலுமாக அலட்சியம் செய்துவிட்டு, அந்த நீர்நிலைக்கு அருகிலேயே ஆபத்தான சூழலில் அவர்கள் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் நவீனத்துவத்தின் பெயரால் நிகழும் அத்துமீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. எத்தகைய கொண்டாட்டமாக இருந்தாலும், அது ஓர் இடத்தின் சமூக நெறிமுறைகளையும் சட்ட விதிகளையும் மதிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.



















