ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு அமெரிக்காவிலிருந்து மிரட்டல் - அனுப்பியது பி...
`ரூ.70,000 கோடி விற்பனையை மறைத்த பிரியாணி உணவகங்கள்' - ஐதராபாத் கடை ரெய்டு மூலம் அம்பலமான மெகா மோசடி
ஐதராபாத் பிரியானி என்றாலே மிகவும் பிரபலம். நாட்டின் பெரும்பாலான இடங்களில் ஐதராபாத் பிரியானி என்ற பெயரில் அதிக அளவில் பிரியானி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல பிரியானி உணவகங்கள் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் வரி ஏய்ப்புகளில் ஈடுபட்டு வந்துள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பிரியானி உணவகத்திற்கு ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற நாடு முழுவதும் கிளைகள் இருக்கிறது.
இந்நிறுவனம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த தகவலை தொடர்ந்து வருமான வரித்துறை 3 பிரபல பிரியானி பிராண்ட் உணவகங்களுக்கு சொந்தமான 30 இடங்களில் ரெய்டு நடத்தியது.
இந்த ரெய்டில் பிரியானி உணவகங்கள் பெரிய அளவில் வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான உணவகங்கள் பயன்படுத்தும் பில்லிங் மென்பொருளின் தரவுகளை, வருமான வரித்துறையின் ஐதராபாத் பிரிவு `செயற்கை நுண்ணறிவு மற்றும் பிக் டேட்டா' கருவிகள் மூலம் ஆய்வு செய்தது.

இதில் 2019 - 20 நிதியாண்டு உணவகங்கள் நாடு முழுவதும் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி விற்பனை வருவாயை மறைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது மொத்த விற்பனையில் 27% ஆகும். இந்தியா முழுவதும் இந்த மென்பொருள் மூலம் சுமார் ரூ.13,317 கோடி மதிப்பிலான பில்கள் கணக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
வரி ஏய்ப்பு கண்டறியப்பட்ட முதல் 5 மாநிலங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகியவை உள்ளன. கர்நாடகாவில் உள்ள உணவகங்கள் ரூ.2 ஆயிரம் கோடிக்கும், தெங்கானாவில் உள்ள உணவகங்கள் ரூ.1500 கோடிக்கும், தமிழ்நாட்டில் உள்ள உணவகங்கள் ரூ.1200 கோடிக்கும் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் ஊழியர்கள் எந்த வித திருட்டிலும் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக கார்டு, UPI மற்றும் ரொக்கப் பணம் என அனைத்து விற்பனையையும் மென்பொருளில் பதிவு செய்கின்றன. ஆனால், வருமான வரி தாக்கல் செய்யும் போது, வரி செலுத்தாமல் இருக்க அந்த மென்பொருளில் உள்ள வசதியைப் பயன்படுத்தி ரொக்க விற்பனை விவரங்களை மட்டும் நீக்கிவிட்டு, குறைவான வருமானத்தைக் காட்டியுள்ளனர்.
ரொக்க பணம் வாங்கியதில் குறிப்பிட்ட பில்கள் அல்லது குறிப்பிட்ட நாட்களில் வசூலான விற்பனையை மொத்தமாக மென்பொருளில் இருந்து அகற்றி விடுகின்றனர். சுமார் 40 உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையிலேயே ₹400 கோடி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அபராதம் மற்றும் வரித் தொகையைக் கணக்கிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நாடுமுழுவதும் உணவகங்கள் மொத்த விற்பனையில் 27 சதவீத விற்பனையை கணக்கில் காட்டாமல் இருந்தது தெரிய வந்துள்ளது.

2019-26ம் ஆண்டு வரை மொத்தம் ரூ.2.43 லட்சம் கோடிக்கு உணவகங்களில் பில்லிங் ஆகி இருக்கிறது. வருமான வரித்துறையினர் ஆரம்பத்தில் ஐதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் ஆந்திரா, தெலங்கானா நகரங்களில் உள்ள உணவகங்களில்தான் ரெய்டு நடத்தினர். இதில் பெரும்பாலான உணவகங்கள் விற்பனையை குறைத்து காட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த விசாரணையை நாடு முழுவதும் நடத்த முடிவு ரெய்து ரெய்டை விரிவு படுத்தியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐதராபாத் பிரியானி செய்த மோசடியால் நாடு முழுவதும் உணவகங்கள் செய்து வரும் தில்லுமுல்லு அம்பலத்திற்கு வந்திருக்கிறது. இதனால் அனைத்து உணவகங்களும் தங்களுக்கு எவ்வளவு அபராதம் வருமோ என கலக்கத்தில் இருக்கின்றன.!


















