IPL 2026: தோனி ஓய்வு; விசில் தடை குறித்த கேள்விகள்; காசி விஸ்வநாதன் அளித்த பதில்...
`இதையெல்லாம் கணக்கில் கொண்டு திட்டமிட்டிருந்தால்...'- TNPSC நிர்வாகக் குளறுபடி குறித்து கல்வியாளர்!
தமிழ்நாடு முழுவதும் நேற்று (பிப்.8) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டது.
தேர்வு ஒத்திவைப்பால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். அடுத்த தேர்வுத் தேதி எப்போது என பின்னர் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் அலட்சியச் செயல்கள் கண்டிக்கத்தக்கவை என இந்தச் சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தில் ஏற்படும் குளறுபடிகள் இது முதன் முறை அல்ல. தேர்வு அட்டவணை அறிவிப்பு, ஹால் டிக்கெட் வெளியீடு, முடிவுகள் வெளியீடு, மதிப்பீடு ஆகியவற்றில் தொடர்ச்சியானத் தாமதங்கள், தவறுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தால் ஏற்படும் குளறுபடிகள் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசியபோது, "அதிகாரிகள் ஒவ்வொரு நிலையிலும் சரியான வழிமுறைகளைப் பின்பற்றி இருக்கிறார்களா?" என கேள்வி எழுப்பி, விரிவாக நம்மிடம் பேசத் தொடங்கினார்.
கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெறும் நீட் குளறுபடிகள்
"இந்த மாதிரி தேர்வு நேரத்தில் எழக்கூடிய குளறுபடிகள் டிஎன்பிஎஸ்சி (TNPSC) நிர்வாகத்தில் மட்டும் இல்லை.
கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெறும் அளவுக்கு நீட் மாதிரியான தேர்வுகளை நடத்தும் நிர்வாகத்திலும் இருக்கின்றன.
ஆனால் இன்றைக்கு டிஎன்பிஎஸ்சி குளறுபடிகள் குறித்து பேசும் தலைவர்கள் இதைப் பற்றி எல்லாம் பேச மாட்டார்கள்.
நேற்று நடந்த சம்பவத்தில் நிர்வாகத் தவறும் இருக்கிறது, தனிமனித தவறும் இருக்கிறது.

அந்தப் பொறுப்பில் இருப்பவர்களைக் கண்காணித்தது யார்?
ஒவ்வொரு நிலையில் இருக்கக்கூடிய அதிகாரிகள் கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டிருந்தால் இந்தச் சிக்கலைத் தவிர்த்திருக்க முடியும்.
எதெல்லாம் தேர்வு மையம்? அந்தத் தேர்வு மையத்தை முன்கூட்டியே பார்வையிடுபவர்கள் யார்?
உண்மையிலேயே அந்தத் தேர்வு மையத்தைப் பார்வையிட்டார்களா? எந்தெந்தத் தேர்வு மையங்களுக்கு எந்தெந்தக் கேள்வித்தாள்களை அனுப்ப வேண்டும்?
அதற்கு யார் பொறுப்பு? அந்தப் பொறுப்பில் இருப்பவர்களைக் கண்காணித்தது யார்? என தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி கண்காணித்திருக்க வேண்டும்.
உளவியல் தாக்கம்
சில நூறு காலிப்பணியிடங்களுக்காக பல லட்சம் பேர் எழுதக்கூடிய தேர்வு இது. தேர்வு நடக்கவில்லை என்றால் தேர்வர்களுக்கு உளவியல் ரீதியானத் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நிச்சயம் தேர்வையும் பாதிக்கும்.
தேர்வு மையத்திற்குள் வருபவர்கள் நம்பிக்கையுடன் தேர்வை எழுதுவதற்கு இலகுவான ஒரு சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும்.
அந்தப் பொறுப்பு யாருக்கு இருக்கிறது என்று பார்க்க வேண்டுமே தவிர ஒட்டுமொத்த நிர்வாக அணுகுமுறையை குறைசொல்ல முடியாது.

எல்லாவற்றையும் சரிபார்க்க வேண்டும்...
நிர்வாகத்தைப் பொறுத்தவரை இயக்குநர், இணை இயக்குநர், உதவியாளர்கள் என ஒவ்வொருவர் கீழும் ஒருவர் இருப்பார்.
ஆக ஒவ்வொரு நிலையிலும் அதிகாரிகள் சரியான வழிமுறைகளைப் பின்பற்றி இருக்கிறார்களா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஒரு மையத்தில் எத்தனை பேர் எழுதியிருக்கிறார்கள். எழுதுபவர்களுக்கு எந்த மாதிரியான கேள்வித் தாள் கொடுக்க வேண்டும்? அது சரியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்று எல்லாவற்றையும் சரிபார்க்க வேண்டும்.
பாதிக்கப்படும் தேர்வர்கள்
ஒரு குளறுபடி நடந்தால் தேர்வர்களின் எதிர்பார்ப்பு கடுமையாகப் பாதிக்கப்படும்.
இதையெல்லாம் தாண்டி அவர்கள் எல்லோரும் தேர்வாணையத்திற்குப் பணம் கட்டியிருப்பார்கள். தேர்வர்களின் பணம், அவர்களின் உழைப்பு எல்லாம் இந்தக் குளறுபடிகளால் பாதிக்கப்படுகிறது.

தீர்வு என்ன?
இதற்குத் தீர்வு என்னவென்றால் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தில் ஆய்வு மேம்பாட்டுப் பிரிவு (Research Development Wing) ஒன்றை உருவாக்க வேண்டும்.
ஒவ்வொரு முறைத் தவறுகள் நடக்கும் போது, அந்தத் தவறுகள் எதனால் நடந்தது? என்பதை பதிவு செய்து, அந்தத் தவறுகள் இனி நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்று ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி வேறு எந்த மாதிரியானத் தவறுகள் நிகழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை அந்த ஆய்வு மேம்பாட்டு பிரிவு மூலம் பதிவுசெய்து தீர்வு காண வேண்டும்.
பணி மாற்றம் செய்வது தீர்வு அல்ல!
நடந்த தவறுகளில் இருந்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் என்ன படிப்பினையைக் கற்றது என்பதுதான் முக்கியம்.
அதைவிடுத்து, தவறு நடக்கிறது என்றால் சம்பந்தப்பட்ட நபரை பணிநீக்கம் செய்வதோ, பணி மாற்றம் செய்வதோ தீர்வு அல்ல.
தவிர யார் இந்த அமைப்பில் உயர்பதவியில் இருக்கிறார்களோ... அவர்கள் தனிப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொண்டால் இது போன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும்.

கூட்டுப் பொறுப்பு
அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கைக்குரியவர்கள், திறமையானவர்கள், தகுதியானவர்கள். ஆனால் லட்சக்கணக்கான மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பதால் எல்லோரும் ஒரு கூட்டுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.



















