`நம் கண்ணுக்கு தெரியாமல் அரூபமாக வாழும் மனிதர்களின் கதை' - எழுத்தாளர் ஜெயராணியின...
ஊட்டி: பகலில் இருள் சூழ்ந்து காணப்பட்ட நகரங்கள் - பனி மூட்டத்தால் முடங்கிய போக்குவரத்து!
குளிர்ந்த கடல் காற்று கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசுவதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மழைப்பொழிவு மற்றும் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உறைபனி நிலவி வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழைப்பொழிவு தொடர்ந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு அடர்த்தியான பனி மூட்டம் காணப்படுவதால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நேற்று கோத்தகிரியைச் சூழ்ந்த அடர்த்தியான பனி மூட்டத்தால் போக்குவரத்து முடங்கியது. வாகனங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. கடுமையான குளிர் நிலவியதால் தொழிலாளர்கள் தங்களின் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பனி மூட்டத்தால் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட நகரங்கள் பகல் பொழுதிலும் இருள் சூழ்ந்து காணப்பட்டன. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அடர்த்தியான பனி மூட்டம் நேற்றைய நாள் முழுவதும் காணப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கோத்தகிரி அருகில் உள்ள புதூர் பகுதியில் சாலையில் விழுந்த அந்நிய மரம் ஒன்று விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் மூலம் அந்த மரம் அகற்றப்பட்டு பின்னர் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடநாட்டில் 39 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலை முதல் மழையின் தீவிரம் குறைந்து காணப்பட்டாலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.!


















