நீளும் போர்: கேஸ் சிலிண்டர் முதல் பெட்ரோல் வரை.! - என்ன பிரச்னை, எப்படி சமாளிக்க...
`எனது மகளுக்கு திருமணம்' - மார்க்கெட்டில் கொத்தமல்லியை விற்பனை செய்ய முடியாமல் கதறி அழுத விவசாயி
விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்று கூறுவதுண்டு. மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தனது விளைபொருள் விற்பனை செய்யப்படாமல் போனதால் கதறி அழுத காட்சி சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள நானாகேதி என்ற இடத்தில் இருக்கும் மார்க்கெட்டிற்கு புதிதாக அறுவடை செய்யப்பட்ட கொத்தமல்லி மற்றும் கடுகு மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு சுட்டெரிக்கும் வெயிலில் கிடந்தது.
மார்க்கெட்டில் காலையில் ஏலம் தொடங்கியது. ஏலத்தின் போது பணியில் இருந்த ஆய்வாளர் ராஜ்குமார் சர்மா அதிக குடிபோதையில் இருந்ததாகவும், சர்வாதிகாரமாக நடந்து கொண்டதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

ஒரு விவசாயியின் கொத்தமல்லி குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.5,700 ஏலம் போனபோது ஆய்வாளர் சீட்டில் ரூ.5,400 என்று பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விவசாயிக்கும், ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ராஜ்குமார் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஏலத்தில் கலந்து கொண்ட வியாபாரிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு அவர்கள் ஏலத்தில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால் ஏலம் நிறுத்தப்பட்டது. அதிகமான விவசாயிகள் அதிகாலையில் தங்களது விளைபொருட்களை மார்க்கெட்டிற்கு எடுத்து வந்திருந்தனர். அவர்கள் ஏலம் நிறுத்தப்பட்டதால் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
சிலர் வாடகைக்கு வாகனங்களை ஏற்பாடு செய்து தங்களது விளைபொருட்களை கொண்டு வந்திருந்தனர். அவர்களில் ஸ்ரீபுர்சக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியும் இருந்தார். அவர் தனது மகளின் திருமணத்திற்கு பணம் ஏற்பாடு செய்ய தனது தோட்டத்தில் விளைந்த கொத்தமல்லியை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தார். ஏலம் நிறுத்தப்பட்டதால் அந்த விவசாயி மார்க்கெட்டிற்கு வெளியில் நின்று கொண்டு கைகூப்பி அதிகாரி மற்றும் வியாபாரிகளிடம் தங்களது பொருட்களை ஏலத்தில் விடும்படி கெஞ்சினார். அவர், "என் மகளுக்கு நாளை திருமணம். அந்த விழாவிற்கு எனக்கு பணம் தேவை. என் விளைபொருள் இன்று விற்கப்படாவிட்டால், திருமணம் பாழாகிவிடும்," என்று கூறி அவர் கதறி அழுதார்.
ஆனால் அவரது கண்ணீரைத் துடைக்க யாரும் முன்வரவில்லை. அவரது கோரிக்கை எடுபடவில்லை. மார்க்கெட் பலமணிநேரம் மூடப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அங்குள்ள நெடுஞ்சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் வந்து விவசாயிகளிடம் பேசி போக்குவரத்தை சரி செய்தனர்.
இது குறித்து கிரிராஜ் என்ற விவசாயி கூறுகையில், " இப்பிரச்னையால் டிராக்டர்களுக்கு இரண்டு முறை பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நான் காலை ஏழு மணிக்கு இங்கு வந்தேன். ஏலம் ரூ. 5,700, ஆனால் ரூ. 300 குறைக்கப்பட்டது. எந்த நிர்வாகமும் இங்கு எதுவும் செய்யவில்லை. எல்லாம் தன்னிச்சையாக நடக்கிறது.
பல விவசாயிகளுக்கு திருமணங்கள் மற்றும் குடும்பப் பொறுப்புகள் இருந்தன, மேலும் அவர்கள் தங்கள் விளைபொருட்களை விற்று பணம் ஏற்பாடு செய்ய மார்க்கெட்டிற்கு வந்திருந்தனர்'' என்றும் அவர் கூறினார். இப்போராட்டம் காரணமாக அதிகாரி ராஜ்குமார் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து ராஜ்குமார் குடித்துவிட்டு பணிக்கு வந்தாரா என்பதை தெரிந்து கொள்ள அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று மார்க்கெட் செயலாளர் சிங் தெரிவித்தார். அதோடு ராஜ்குமார் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். விவசாயி கதறி அழுத காட்சி சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





















