மோடியின் தமிழக வருகை; மேடையேறப் போகும் கட்சிகள் எவை? - என்.டி.ஏ கூட்டணிக்கு அழுத...
ஓமலூர்: வாடகைப் பிரச்னை; மதுப்பிரியர்கள் தொல்லை... காய்கறிச் சந்தையில் கால்வைக்காத வியாபாரிகள்!
சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் புதிதாக சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, தமிழ்நாடு நகராட்சித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரால் 22.02.2025 என்று திறப்பு விழா கண்ட காய்கறி சந்தை, இன்று வரை பயன்பாட்டுக்கு வராமல் மது பிரியர்களுக்கான முழு நேர மதுக்கூடமாக மாறியுள்ளது, கவலையடையச் செய்கிறது.
இது குறித்து தகவல் நமக்கு கிடைத்தவுடன், நேரடியாகச் சென்று விசாரித்தோம். மின்சாரம் வசதி, தண்ணீர் வசதி மற்றும் கழிவறை வசதி என அடிப்படை வசதிகள் இருந்தபோதும், ஏன் காய்கறிக் கடைக்காரர்கள் சந்தைக்குள் கடைகள் அமைக்கவில்லை என்பது சற்றே வியப்பாக இருந்தது.
ஏனென்றால்... கட்டடம்தான் புதியதே தவிர, ஏற்கெனவே அங்குதான் காய்கறிக்கடைகள் இயங்கி வந்தன. அதனால், கட்டடப் பணிகள் முடிந்த பிறகு அங்கு கடைகளைத் திறப்பது வியாபாரத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. பொது மக்களுக்கும் அது ஏற்கெனவே பழக்கப்பட்ட இடம் என்பதால், அங்கு வேறு ஏதோ பிரச்னை உள்ளது என்பது தெளிவானது.

இது குறித்து புதிய காய்கறிச் சந்தைக்கு அருகில் கடைப்போட்டுள்ள வியாபாரிகளிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், ``தலைமுறை தலைமுறையாய் இங்குதான் கடைப்போட்டு வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால் தற்போது இங்கு கட்டப்பட்டிருக்கும் சந்தையை ஏதோ ஒரு புதிய நபருக்கு ஏலத்தில் விட்டிருக்கிறார்கள். அந்த தனி நபர் அதிக வாடகை கேட்கிறார். எங்களால் சமாளிக்க முடியாது என்பதால், இங்கு சாலையில் கடைப்போட்டு எங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகிறோம்" என்றனர்.
மக்கள் கோரிக்கை என்ன?
அங்குள்ள பெரும்பான்மையான காய்கறிக் கடைக்காரர்களின் கோரிக்கை அரசு மாமூல் கடைக்காரர்களுக்கு சற்று முன்னுரிமை அடிப்படையில், குறைந்த மற்றும் நியாயமான வாடகையை நிர்ணயம் செய்து தர வேண்டும் என்பதே!
``பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கடைகள் மழை, வெயிலில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இதற்கு மாற்றாக இந்தப் புதுக் கட்டடம் கட்டாமலே இருந்திருந்தால், நாங்கள் எங்கள் மாமூல் கடைகளிலே இருந்திருப்போம்" என்று மனம் நோகிறார், மற்றொரு கடைக்காரர்.
பெரும்பாலானோர் வெளியே சாலையில் கடைகள் போட்டு வியாபாரம் செய்து வரும் நிலையில், வியாபாரம் செய்வதற்காக கட்டப்பட்ட சந்தையில் மதுபிரியர்களின் ஆதிக்கம் தலைதூக்கிக் காணப்படுகிறது. சந்தைக்குள் மது பாட்டில்களுடன் முகாமிடும் சமூகவிரோதிகள், மக்கள் அதிகம் புழங்கும் இடத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றனராம்.

எனவே அரசு, ஏல ஒப்பந்ததாரரோடு பேசி, ஒரு நியாயமான வாடகை அடிப்படையிலும்... மாமூல் கடைக்காரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலும் கடைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காய்கறிக் கடைக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து ஓமலூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தை அணுகி விசாரித்தபோது, ``காய்கறிச் சந்தை ஏலத்தில் விடப்பட்டது. வியாபாரிகளின் கோரிக்கை எங்கள் கவனத்துக்கு வந்திருக்கிறது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் இருதரப்பினரிடமும் பேசி, சுமுக தீர்வு காணப்படும்" என்றனர்.





















