Shriya Saran: ``யார் இந்த முட்டாள்?" - ஆத்திரத்தில் கொந்தளித்த நடிகை ஸ்ரேயா; என்...
``குண்டும் குழியுமான சேலம் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு எப்போது?''- மக்களின் அவசரக் கோரிக்கை
சேலம் மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அண்மையில் ஆர்.சி.செட்டிப்பட்டி மற்றும் காமலாபுரம் சாலை பகுதிகளில் என இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
“அதற்கென்ன நல்ல விஷயம் தானே?” என கேட்கத் தோன்றுகிறதா? ஆம், எனக்கும் கேட்கிறது.
பெரும்பாலான இடங்களில் கட்டப்படும் மேம்பாலங்களின் காரணமாக, அவற்றின் கீழ் உள்ள சாலைகள் பராமரிப்பு இல்லாமல், சாதாரண மக்களின் உயிருக்கும் வாகன உடமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
அதுபோலதான் இங்கும் பராமரிப்பு இல்லாத சாலையின் காரணமாக பல விபத்துகள் நடைபெற்று வருகின்றன. அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளுக்கும் இந்த விபத்துகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை.

முதல்வரும் அதில் தான் பயணிக்கிறாரா?
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அடிக்கடி முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சேலம் வருகை புரிவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்த பிறகு சாலை வழியாக பிற பகுதிகளுக்கு செல்வது வழக்கமாக உள்ளது.

காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் என எங்கு செல்ல வேண்டுமானாலும் இந்த பராமரிப்பு இல்லாத சாலையைத் கடந்தே செல்ல வேண்டும்.
ஆனால் அங்குதான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. ஆரம்பத்தில் சொன்னது போல, காமலாபுரம் மற்றும் ஆர்.சி.செட்டிப்பட்டி மேம்பாலங்களின் கீழுள்ள தேசிய நெடுஞ்சாலை சாலையே பராமரிப்பு இல்லாத அச்சுறுத்தல் சாலையாக உள்ளது.
தலைவர்களுக்கு எல்லாம் மேம்பாலத்தின் மேல் நல்ல சாலை; ஆனால் மக்களுக்கோ கீழே பராமரிப்பு இல்லாத, குண்டும் குழியுமான சாலை.
“இது தான் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பு வரிசையா?” என்று சரமாரியாக கேள்வி கேட்கிறார்கள் பொதுமக்கள்.
அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகளிடம் இது குறித்து கேட்கும் போது,
“காலை–மாலை அச்சத்துடன் இந்த சாலையைத் தான் கடக்க வேண்டி வருகிறது. குண்டும் குழியுமான சாலையால் முதுகுவலி, உடல்வலி ஏற்படுகிறது. சில நேரங்களில் திடீரென குழிக்குள் வாகனச் சக்கரம் போகும் போது நிலை தடுமாறி விபத்துக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது. இதனால் இடுப்பு எலும்பு பிரச்சினைகள், நரம்பு இழுத்துப் பிடிப்பு போன்றவை அதிகரித்து மருத்துவச் செலவும் கூடுகிறது,”
என்று அவர்கள் கூறுகின்றனர்.
பல இரத்தக் காயங்கள் மற்றும் உயிர்பலி ஏற்படக் காத்திருக்கும் நிலையைத் தடுக்க, உடனடி சாலைப் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு சரிசெய்ய வேண்டும் என மக்களின் அழுத்தமான குரல்கள் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.

மருத்துவ நலனைக் கருதியாவது மாற்றம் நிகழுமா?
அருகிலுள்ள சில கிராம மக்கள் ஆம்புலன்ஸ் சேவைகள் பெறும் மிக முக்கியமான சாலையாக இது உள்ள நிலையில், சாதாரண மக்களுக்கு ஏதுவான மருத்துவ சேவையை கருத்தில்கொண்டு தேசிய நெடுஞ்சாலை புனரமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்ட போது, “தேர்தல் வாக்கு சேகரிப்புக்காக வரும் போது இந்த பிரச்னையை முக்கியமாக முன்வைத்து, எங்கள் வாக்குகள் பெற முயற்சிக்கின்றனர்” என்றனர்.
இது தொடர்பாக சேலம் துணை பொது மேலாளர், நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குநரிடம் பேசிய போது, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் மூலம் உடனடி பராமரிப்பு பணிகளைச் செய்ய ஆவணம் செய்வதாகவும், தற்போது அதிக பாதிப்புள்ள சாலைகளுக்கு முன்னுரிமை அளித்து சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
















