கும்பகோணம்: ”அமைச்சர் ஷாஜஹானை நேரில் வாழ்த்திய திமுக சீனியர்கள்”- சர்ச்சையை கிளப...
கேரளம்: பினராயி விஜயனின் வீடு, மருமகன் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் இடி ரெய்டு - பின்னணி என்ன?
கேரள மாநிலம் கொச்சியில் செயல்படும் மணல் ஆலை நிறுவனமான சி.எம்.ஆர்.எல் கம்பெனியுடன், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்ஸாலாஜிக் கம்பெனி நிதி ஒப்பந்தம் செய்ததும், செய்யப்படாத வேலைகளுக்காக மாதப்படி என கணக்கில் பணம் வாங்கியதாகவும் கடந்த சி.பி.எம் ஆட்சியிலேயே புகார் எழுந்தது.
சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திடமிருந்து எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் எந்தவொரு முறையான சேவையையும் வழங்காமல், கைமாறாக 1 கோடியே 72 லட்சம் ரூபாய் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த நிதியியல் பரிவர்த்தனையானது சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் வரம்பிற்குள் வரும் என்பதுதான் அமலாக்கத்துறையின் முதன்மையான வாதமாகும். இதற்கிடையே சி.எம்.ஆர்.எல் - எக்ஸாலாஜிக் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணையை தடை செய்ய வேண்டும் எனக் கோரி சி.எம்.ஆர்.எல் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் நேற்று அதிரடியாகத் தள்ளுபடி செய்தது.
மேலும், விசாரணையைத் தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி அமர்வு ஏற்றுக்கொண்டது. அதைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு முன்பே கேரள முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான பினராயி விஜயன் வசித்துவரும் திருவனந்தபுரம் பேக்கரி ஜங்சனில் உள்ள வாடகை வீடு, கண்ணூரில் உள்ள வீடு, சி.எம்.ஆர்.எல் அலுவலகம் உட்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

பினராயி விஜயனின் மருமகனும் பேப்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸின் கோழிக்கோடு கோட்டூளியில் உள்ள வீடு, சி.எம்.ஆர்.எல் மேலாண்மை இயக்குனர் சசிதரன் கர்த்தாவின் கொச்சியில் உள்ள வீடு, ஆலுவாவில் உள்ள சி.எம்.ஆர்.எல் அலுவலகம், பெங்களூருவில் உள்ள எக்ஸாலாஜிக் அலுவலகம் மற்றும் சசிதரன் கர்த்தாவுடன் தொடர்புடைய மற்ற இரண்டு இடங்கள் உட்பட மொத்தம் 12 இடங்களில் அமலாக்கத்துறையின் இந்த சோதனை நடந்து வருகிறது.
தற்போது பினராயி விஜயனும் அவரது குடும்பத்தினரும் திருவனந்தபுரத்தில் உள்ள வாடகை வீட்டில்தான் உள்ளனர். அங்கு பினராயி விஜயன் மற்றும் அவரது மகள் வீணா ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலங்களைச் சேகரித்து வருகின்றனர். இதற்கிடையில், விசாரணை அதிகாரிகள் கண்ணூரில் உள்ள வீட்டிற்குச் சென்றபோது அவ்வீடு பூட்டிக்கிடந்தது. பின்னர், அங்கிருந்த பராமரிப்பாளரை வரவழைத்து வீடு திறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
சோதனை தொடங்கப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சி.பி.எம் தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சோதனையானது பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து நடத்தும் கூட்டு நடவடிக்கையின் தொடக்கம் எனவும், அமலாக்கத்துறை என்பது சங் பரிவாரின் ஒரு கூடுதல் துறை என்றும் சி.பி.எம் மூத்த தலைவர் பி.ஜெயராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோட்டூளியில் உள்ள இல்லத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றபோது முன்னாள் அமைச்சர் முகமது ரியாஸ் வீட்டில் இல்லை. இதுகுறித்து முகமது ரியாஸ் தனது முகநூல் பக்கத்தில், "சுற்றிவளைத்து அடித்துக் கொள்ளுங்கள், ஆனால் சங் பரிவாருக்கு முன்னால் ஒருபோதும் மண்டியிட மாட்டேன். கடைசி மூச்சு வரை போராடுவேன்" என தெரிவித்துள்ளார்.

கோழிக்கோட்டிலும் சி.பி.எம் தொண்டர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசும் கேரளாவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசும் இணைந்து நடத்தும் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும்., கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசிய அடுத்த நாளே இந்த ரெய்டு நடைபெறுவது பா.ஜ.க - காங்கிரஸ் இணைந்து நடத்தும் கூட்டுச் சதி எனவும் சி.பி.எம் குற்றம் சாட்டி உள்ளது.













