`ஆளுநரே பல்கலைகக்கழகங்களின் வேந்தரா? 'பாஜக-வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சி' -...
கும்பகோணம்: ”அமைச்சர் ஷாஜஹானை நேரில் வாழ்த்திய திமுக சீனியர்கள்”- சர்ச்சையை கிளப்பிய சந்திப்பு!
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் போட்டியிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தொகுதியில் ஐயூஎம்எல் கட்சியைச் சேர்ந்த ஷாஜஹான் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். இந்நிலையில் தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன. தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார். தவெக அரசுக்கு தங்கள் கூட்டணியில் நின்ற கட்சிகள் ஆதரவளித்ததை திமுகவினரால் ஏற்கமுடியவில்லை என சொல்லப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தது தவெக. அக்கட்சிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதனை ஆ.ராசா விமர்சித்ததும் பேசு பொருளானது. இதே போல் திமுக-வினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்ற ஷாஜஹான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் ஆடுதுறையில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் திமுக அமைச்சரான எம்.எல்.ஏ கோவி.செழியன், முன்னாள் எம்.பி ராமலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தற்கு எதிராக மற்றொரு தரப்பு திமுக-வினர் பதிவிட்டு வருவது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
இதுகுறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், ``திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவளித்ததுடன் அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளனர். இதனை திமுகவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆ.ராசா தெரிவித்த கருத்துக்கு எதிராக குன்னத்தில் விசிகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது திமுக- விசிக-வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா நாகப்பட்டினம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மற்ற கூட்டணி கட்சியினர் தவெக அமைச்சரவையில் இடம் பெற்ற நிலையில் வரும் தேர்தல்களில் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என கூறியிருந்தார் ஜவாஹிருல்லா. உடனே நாகப்பட்டினத்தை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் ஆவேசமாகி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் நின்று வெற்றி பெறுங்கள் என போஸ்டர் ஒட்டியது சலசலப்பை கிளப்பியது.
இதுபோல் தொடர்ந்து கூட்டணி கட்சியினரின் செயலுக்கு எதிராக திமுக-வினர் கருத்து கூறி வருகின்றனர். திமுக தலைமையே சமீபத்தில் நடந்த இளைஞரணி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும், ராகுல் காந்திக்கு எதிராக கோஷமிட்டு எதிர்ப்பையும், ஆதங்கத்தையும் பதிவு செய்தது கவனம் பெற்றது. இப்படியான சூழலில் கோவி.செழியன், ராமலிங்கன், அண்ணாதுரை, ஜெயபால் ஆகியோர் அமைச்சர் ஷாஜஹானை சந்தித்து வாழ்த்து தெரிவித்தற்கு எதிராக திமுகவினர் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

``நம்மால் வெற்றி பெற்றவர் ஷாஜஹான் அவர் தான் நம்மை வந்து சந்தித்திருக்க வேண்டும், நீங்கள் ஏன் தேடிப்போய் பார்த்தீர்கள், தலைமை, தலைவர் அனுமதியோடு போய் பார்த்தீர்களா? " என்றெல்லாம் அதில் கேள்வி எழுப்பியுள்ளனர். அமைச்சர் ஆனதும் திமுக மாவட்ட செயலாலர் அன்பழகன், முன்னாள் மாவட்ட செயலாளரான எம்.பி கல்யாணசுந்தரம் என யாரையும் ஷாஜஹான் மரியாதை நிமித்தமாக சந்திக்காத நிலையில் நீங்கள் ஏன் பார்த்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.













