கும்பகோணம்: ”அமைச்சர் ஷாஜஹானை நேரில் வாழ்த்திய திமுக சீனியர்கள்”- சர்ச்சையை கிளப...
பினராயி விஜயன் வீட்டில் ED சோதனை: ``எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக..." - ஸ்டாலின் கண்டனம்!
கேரள முன்னாள் முதலமைச்சரும், சிபிஐ(எம்) கட்சியின் மூத்த பொலிட்பீரோ உறுப்பினருமான பினராயி விஜயனின் வீடுகளில் அமலாக்கத்துறை இன்று (மே 27, 2026) அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. கொச்சி கனிம மணல் நிறுவனம் (CMRL) மற்றும் பினராயி விஜயனின் மகள் டி. வீணாவின் 'எக்ஸாலஜிக்' (Exalogic) நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான நிதிப் பரிவர்த்தனை வழக்கில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் கேரள அரசியலில் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே கடுமையான அரசியல் போராக மாறியுள்ளது.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு சிபிஐ(எம்) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், ``பா.ஜ.க அரசு எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து நடத்தும் ஒரு திட்டமிட்ட தாக்குதல். மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படும் அமலாக்கத்துறையைக் கண்டு சிபிஐ(எம்) கட்சியோ அல்லது பினராயி விஜயனோ ஒருபோதும் அஞ்சமாட்டார்கள், பின்வாங்கவும் மாட்டார்கள். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் சுமத்தியது. அதைப் பயன்படுத்தியே பா.ஜ.க ஒரு முதலமைச்சரை சிறையில் அடைத்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிவிட்டது. டெல்லியில் பா.ஜ.க-வுக்கு காங்கிரஸ் எப்படி உதவியதோ, அதேபோல் தான் கேரளாவிலும் செய்கிறது" எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``முன்னாள் கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள அமலாக்கத்துறை சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். மத்திய புலனாய்வு அமைப்புகள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்து வருவதை இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் ஒருமுறை தீவிர கவலையோடு வெளிப்படுத்துகின்றன. அதே வேளையில், "பினராயி விஜயனை இன்னும் ஏன் பா.ஜ.க குறிவைக்கவில்லை?" என்று தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி, பொறுப்பற்ற முறையில் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய சில காங்கிரஸ் தலைவர்களின் வெற்று வாதங்களையும் இந்த நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.













