ஜொலிக்கும் மெட்ராஸ் சட்டக் கல்லூரி : புதுப்பொலிவுடன் 126 ஆண்டுகள் பழமையான பாரம்ப...
கோவை: "விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை?" - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசைக் கண்டித்து தற்போது பதிவிட்டிருக்கிறார்.
மு.க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் சமூக வலைத்தளப் பதிவில், "கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?
கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்?
உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
















