Big Boss Kannada: `சாதி பாகுபாடு' - கிச்சா சுதீப், போட்டியாளர்கள் மீது மகளிர் ஆண...
சென்னை கந்தகோட்டம்: கனவில் வந்து காட்சிதந்தார்; வள்ளலார் முதல் பாம்பன் சுவாமிகள்வரை வழிபட்ட முருகன்!
தருமமிகு சென்னை என்று போற்றப்படும் சென்னை மாநகரில் பல முக்கியக் கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் பல பழைமையும் பெருமையும் உடையவை. அப்படிப்பட்ட சென்னை ஆலயங்களில் ஒன்றுதான் கந்தகோட்டம். இந்த ஆலயம் அமைந்த வரலாறும் சிறப்புகளும் சிலிர்ப்பூட்டுபவை.
மதுரை மீனாட்சி அம்மனின் பக்தராக விளங்கிய சிதம்பரம் சுவாமிகளை அன்னை மீனாட்சி திருப்போரூர் செல்லுமாறு ஆணையிட்டாள்.
சிதம்பரம் சுவாமிகளும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடந்துவரும்போது ஓரிடத்தில் முருகப்பெருமானின் தரிசனம் கிடைத்தது. அந்த அற்புத தரிசனத்தில் மகிழ்ந்த சுவாமிகள் அதுதான் முருகப்பெருமான் வான் மார்க்கமாக சூரனுடன் போரிட்ட தலம் என்பதை அறிந்து மகிழ்ந்தார். அங்கேயே முருகனுக்குத் திருக்கோயில் ஒன்றையும் கட்டி வழிபடத் தொடங்கினார். அதுவே திருப்போரூரில் இன்று நாம் தரிசிக்கும் முருகப்பெருமானின் ஆலயம்.
இந்த ஆலயத்தின் மகிமைகளை அறிந்த முருக பக்தர்கள் அடிக்கடி சென்று தரிசனம் செய்து மகிழ்ந்தனர். சென்னையில் இருந்து பல பக்தர்கள் மாதம்தோறும் திருப்போரூர் சென்று வழிபட்டுவந்தனர்.
அவர்களில் முக்கியமானவர்கள் வேளூர் மாரி செட்டியார் மற்றும் கந்தப்ப ஆச்சாரி ஆகியோர். ஒவ்வொரு கிருத்திகைக்கும் தவறாமல் திருப்போரூர் சென்று தரிசனம் செய்வது இவர்களின் வழக்கம்.

கந்தகோட்டம்
1595 ம் ஆண்டு மார்கழி மாதம் அவர்கள் செல்லும்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. திருப்போரூர் செல்லும் வழியில் உள்ள ஒரு தடாகக் கரையில் வேப்ப மர நிழலில் படுத்து ஓய்வெடுத்தனர் இருவரும். அப்போது மாரியின் மேனி மீது பாம்பு ஒன்று ஏறியது. ஆனால் அவர் விழிக்க வில்லை.
மாறாக உள்ளூர பேரின்ப வெள்ளத்தில் மூழ்குவதுபோல் உணர்ந்தார். பாம்பு சிறிது நேரம் விளையாடுவதுபோல் ஊர்ந்து விட்டுப் பின் இறங்கிச் சென்றது. அடுத்த கணம், மாரியின் கனவில் முருகப்பெருமான் தோன்றினார்.
“இங்கே நான் புற்றுக்குள் இருக்கிறேன். என்னைச் சென்னைப் பட்டணம் கொண்டு செல்” என்று உத்தரவிட்டார். மாரி மேனி சிலிர்க்க எழுந்துகொண்டார். நண்பரிடம் நடந்ததை விவரித்தார்.
இருவரும் சேர்ந்து புற்றைத் தோண்டிப் பார்த்து முருக விக்ரகம் இருப்பதை அறிந்துகொண்டு பின் அந்தப் புற்றை மூடி வைத்துவிட்டுத் திருப்போரூர் சென்று வழிபட்டுத் திரும்பி வந்தனர்.

தாங்கள் மூடிவைத்த புற்றை மீண்டும் திறந்து அதிலிருந்த முருகப்பெருமானின் விக்ரகத்தை எடுத்துக்கொண்டு சென்னை வந்தனர். அங்குள்ள சர்வ சித்தி விநாயகர் கோயிலில் யாவரும் காண அத்திருவுருவச் சிலையை வைத்தனர்.
தம்மை நாடிவந்து அருள்பாலித்த கந்தனுக்கு அங்கே ஒரு கோயில் எழுப்ப வேண்டும் என்று விரும்பினர். பல நல்ல உள்ளங்களை நாடி நிதி பெற்றுக் கோயில் எழுப்பினர். அப்படி எழுந்த ஆலயம்தான் பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோயில்.
கோயில் அமைப்பு
கோயிலின் வாயிலை கண்கவர் ராஜகோபுரம் அழகு செய்கிறது. கந்தபுராணம் முழுதும் சுதைச் சிற்பங்களாகத் திகழ, ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் வடதிசை நோக்கி காட்சியளிக்கிறது.
எதிரில் சித்தி கணபதி, வீரபாகுத் தேவர், உற்சவமூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். கிழக்கு நோக்கிய மூலஸ்தானத்தின் இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர். மூலஸ்தானத்தில் கந்தசாமி என வழங்கும் முத்துக்குமாரசுவாமி அருங்காட்சி வழங்குகிறார்.
இருபுறமும் தேவியர் திகழ திருப்போரூரில் உள்ளது போல சிறிய வடிவம். எதிரில் `பிணிமுகம்’ என்னும் யானை வாகனம் உள்ளது. மூலவருக்கு இடது புறம் மீனாட்சி சுந்தரேசர் சந்நிதிகளுடன், அருகில் ஆறுமுக பரமன் தேவியருடன் உற்சவ மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார்.
மூலஸ்தானத்திற்கு வலது புறம் தனிச் சந்நிதியில் வள்ளி, தேவசேனை சமேத உற்சவமூர்த்தியான முத்துக்குமாரசுவாமியின் சந்நிதி அமைந்துள்ளது. பின்புறம் திருக்குளம். அதன் கிழக்குப் பகுதியில் 130 அடி நீளத்தில் வடக்கு - தெற்காக சிற்ப அழகுடன் திகழும் நீண்ட மண்டபமும் உண்டு. அருகில் பள்ளியறை, ஞான தண்டாயுதபாணி சந்நிதிகளைத் தரிசிக்கலாம்.
மேலும் சுமித்ரேசர், துர்கை, வீரபத்ரர், சூரியன், வயிரவர், இடும்பன் ஆகியோரின் சந்நிதிகளையும் தரிசிக்க இயலும்.

வள்ளலார் முதல் பாம்பன் சுவாமிகள் வரை
வள்ளலார் கந்தகோட்டத்து முருகனை தரிசித்துப் பாடியுள்ள தெய்வமணிமாலை 31 பாடல்களும், கந்தர் சரணப் பத்து பாடல்களும் பிரசித்திபெற்றவை. `ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்’ என்று தொடங்கும் பாடல் இந்த ஆலயத்தில் வேண்டிப்பாடியதுதான்.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிள்ளைத்தமிழ், கலம்பகம், திரிபந்தாதி, சந்தத் திருப்புகழ், சண்முகர் வகுப்பு, வேல் வகுப்பு, திருவருள் வினோத வகுப்பு, பதிற்றுப்பத்தந்தாதி, விமான மிசை கண்ட பதிகம், சண்முக தரிசன பதிகம், சிவகுரு தரிசன பதிகம் மற்றும் சில பதிகங்களுடன் ஏறக்குறைய 750 பாடல்களைப் பாடியுள்ளார்.
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்... கந்தசாமிப்பா, கந்தர் இரட்டை மணிமாலை, கந்தர் ஒருபா ஒரு பஃது, கந்தர் திரு அவதாரம், கந்தர் நான்மணிமாலை, கந்தவேள் வேட்கை, சென்னைசேய முதலான பாடல்களை அருளிச் செய்துள்ளார்.
குளத்தூர் வரகவி கிருஷ்ணப்ப செட்டியார்... செல்வக்கந்தர் தலப் புராணம், வேதாந்த விருத்தம், கந்தர் திருப்புகழ், கந்தர் கீர்த்தனை முதலானவற்றை இயற்றியுள்ளார்.
இங்கே மாதாந்திர கிருத்திகை, சஷ்டி வழிபாடுகள், ஆடிக் கிருத்திகை, ஐப்பசி கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், தை பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம் ஆகிய விழாவைபவங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

















