Bank account-ல ரூ.1,20,000 உங்ககிட்ட இருந்தா... நீங்க உஷார்?! | #EmergencyFund
டெல்லி: `பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்கள் சப்ளை; தாக்குதல் நடத்த சதி' - தீவிரவாதிகள் கைது
டெல்லி அருகே ஜம்மு காஷ்மீர் போலீஸார் ரெய்டு நடத்தி 350 கிலோ வெடிமருந்துகளையும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 20 ரிமோட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் இதே போலீஸார் ரெய்டு நடத்தி துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ‘‘கடந்த மாதம் ஸ்ரீநகரில் ஜெய்ஷ் இ மொகமதின் போஸ்டர்கள் தென்பட்டன. அந்த போஸ்டர்களை ஒட்டியது யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வந்தது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதனை ஒட்டியது டாக்டர் அடில் அகமது என்று தெரியவந்தது.
அவர் அனந்த்நாக் மருத்துவ கல்லூரியில் கடந்த ஆண்டு வரை வேலை செய்திருந்தார். அவர் தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரான்பூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவர் அனந்த்நாக் கல்லூரியில் பணியாற்றியபோது பயன்படுத்திய லாக்கரை திறந்தபோது அதில் துப்பாக்கி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கொடுத்த தகவலின் பேரில்தான் பரிதாபாத்தில் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
டாக்டர் அடில் அகமது, படித்த இளைஞர்களை தீவிரவாத அமைப்புகளுக்கு சேர்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு அவரிடம் விசாரணை நடத்தி புல்வாமாவை சேர்ந்த டாக்டர் முஜாமில் சகீல் என்பவரும் கைது செய்யப்பட்டார்,’’ என்று தெரிவித்தனர்.
டெல்லி அருகில் 350 கிலோ வெடிமருந்துகளை எந்த தேவைக்காக பதுக்கி வைத்திருந்தனர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத்தில் தீவிரவாதிகள் கைது
நாடு முழுவதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த ஐதராபாத் டாக்டர் உட்பட 3 பேரை குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
அகமத் மொஹையுதின் சயீத் என்ற ஐதராபாத் டாக்டரிடமிருந்து 3 துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். குஜராத் தீவிரவாத தடுப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சயீத் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது மொபைல் போனை ஆய்வு செய்து உத்தரபிரதேசத்தின் ஷாம்லியைச் சேர்ந்த தையல்காரர் ஆசாத் சுலேமான் ஷேக் (20) மற்றும் உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியைச் சேர்ந்த மாணவர் முகமது சுஹைல் முகமது சலீம் கான் (23) ஆகிய இருவரையும் குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.

சயீத் ஆப்கான் தீவிரவாத அமைப்பு ஒன்றுடன் தொடர்பு வைத்திருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. மூவரும் லக்னோ, டெல்லி, அகமதாபாத்தில் தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்துள்ளனர்.
அவர்கள் தங்களுக்கு தேவையான ஆயுதங்களை பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

















