பனை & கடல் சார் தொழிலாளர்களின் வாழ்வு; வலியையும் உணர்ச்சியையும் ஆவணப்படுத்திய இள...
நலங்கிள்ளியின் ’ஆர்எஸ்எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன்' நூலுக்கு தடை விதிக்க கோரிக்கை – காரணம் என்ன?
கோவை புத்தகத் திருவிழா வருகின்ற 17ம் தேதியன்று துவங்க உள்ளது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த எதிர் வெளியீடு சார்பில், மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் நலங்கிள்ளி எழுதிய ’ஆர்.எஸ்.எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன்’ என்ற சுயசரிதை புத்தகமும் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த புத்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த சண்முகம் என்ற வழக்கறிஞர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
நலங்கிள்ளி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர் அல்ல.
இது குறித்து சண்முகம் கூறுகையில், “ஆர்.எஸ்.எஸ் என்பது நாடு முழுவதும் லட்சக்கணக்கான உறுப்பினர்களையும், தன்னார்வலர்களையும் கொண்ட நன்கு அறியப்பட்ட ஒரு சமூக மற்றும் கலாச்சார அமைப்பாகும். ஆர்.எஸ்.எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன் நூலின் ஆசிரியர் நலங்கிள்ளி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் அல்ல.
இந்த நூலின் தலைப்பை வைத்து பார்க்கும் போதே, இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு எதிரான கருத்துகளை கொண்ட புத்தகம் என்பது தெரியவருகிறது. இந்த நூல் வெளியிடப்பட்டால் ஆர்.எஸ்.எஸ். பற்றி பொதுமக்களிடத்தில் தவறான புரிதலை ஏற்படுத்தவும், நற்பெயரை கெடுக்கவும், பொது அமைதி மற்றும் நல்லிணத்தை குலைக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த புத்தகத்திற்கு காவல் துறையினர் தடை விதிக்க வேண்டும். இல்லையெனில் காவல் துறையினர் நடவடிக்கையை பொறுத்து உயர் நீதிமன்றத்தை நாடுவோம்” என்றார்.

பொய் எதுவும் சொல்லவில்லை!
எழுத்தாளர் நலங்கிள்ளியிடம் விளக்கம் கேட்டபோது, “நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தது உண்மை. நான் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவன். பிராமணர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்துள்ளேன். பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில், அதில் கலந்து கொள்ள ஆசைப்பட்டவன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக, பல அமைப்புகளை எதிர்த்து வாதாடியுள்ளேன்.
நான் எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் ஈர்க்கப்பட்டேன், பின்னர் எழுந்த விமர்சனங்களால் எப்படி அந்த அமைப்பில் இருந்து வெளியேறினேன் என்பதை இந்த புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளேன். இந்த புத்தகத்தில் நான் பொய் எதுவும் சொல்லவில்லை. கருத்தை கருத்தால்தான் எதிர் கொள்ள வேண்டும். புத்தகத்திற்கு தடை கேட்பது அபத்தமானது. தடை கேட்டு நீதிமன்றம் சென்றாலும் வழக்கு நிற்காது. இந்த புத்தகத்தை படிப்பவர்கள் உண்மையை அறிந்து மனம் மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.

காட்டுமிராண்டிதனம்
எதிர் வெளியீடு உரிமையாளர் அனுஜ், “ஒருவரின் வாழ்க்கை வரலாறை சொல்ல அவருக்கு முழு உரிமை உள்ளது. புத்தகத்தை முழுமையாக படிக்காமல் வெறும் தலைப்பை மட்டும் வைத்து முன்முடிவு எடுத்து தடை கோருவது நியாயமல்ல. இப்புத்தகத்திற்கு எதிர் கருத்து இருந்தால், அவ்வமைப்பினர் அக்கருத்துகளை புத்தகமாக எழுதலாம். ஆனால் இந்த 21ம் நூற்றாண்டிலும் புத்தகத்திற்கு தடை கேட்பது காட்டுமிராண்டிதனம்” என்றார், காட்டமாக.















