``சுடுகாட்டுக்கு சாலை இல்லை, சேறு சகதியில் நடந்து போகிறோம்'' - நான்கு தலைமுறையாக...
புதுச்சேரி: ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்ட தவெக; எதிர்ப்புகளை மீறி நண்பருக்கு கைகொடுப்பாரா ரங்கசாமி?
தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன.
அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். அதனடிப்படையில் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்திருக்கின்றனர்.
அந்தக் கடிதத்தில் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் வழியாகச் சென்று மக்களைச் சந்திக்க இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதேபோல அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 வரை நடைபெறும் இந்த ரோடு ஷோவில், உப்பளம் சோனாம்பாளையம் பகுதியில் அவர் உரையாற்ற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அது தொடர்பாக புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகம், புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி அவர்களுக்கு மனு ஒன்றை அளித்திருக்கிறது. அந்த மனுவில், `புதுச்சேரியில் நடிகர் விஜய்யின் ரோடு ஷோ நடத்துவதற்கு த.வெ.க-வினர் அனுமதி கேட்டிருக்கின்றனர்.
கரூரில் விஜய் நடத்திய ரோடு ஷோவில் 41 பேர் உயிரிழந்தனர். அதைக் கவனத்தில் கொண்டு புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளிக்கக் கூடாது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதையும் மீறி அனுமதி கொடுத்தால் போராட்டம் நடத்துவோம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதேபோல சமூக ஆர்வலர் அசோக்ராஜா என்பவர் டி.ஜி.பி அலுவலகத்தில் கொடுத்திருந்த மனுவில், `பொது இடங்களில் குறிப்பாக பிரதான சாலைகளில் அதிகளவு கூட்டத்தைக் கூட்டும் ரோடு ஷோ போன்ற நிகழ்வுகள், எவ்வளவு ஆபத்தானது என்று கரூர் அசம்பாவிதம் நமக்கு தெளிவாகக் காட்டியிருக்கிறது.
புதுச்சேரியில் இருக்கும் பிரதான சாலைகள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகள் அன்றாடம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவியும் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கினால், சிறிய ஊரான புதுச்சேரியில் அதிகளவு பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, மாணவர்களின் படிப்பு போன்றவற்றுடன், முதியவர்கள் மற்றும் நோயாளிகளும் பாதிக்கப்படுவார்கள்.

மக்களின் உயிருக்கும், பாதுகாப்பிற்கும் முன்னுரிமை கொடுத்து நடிகர் விஜய்யின் ரோடு ஷோவுக்காக த.வெ.க-வினர் கேட்கும் அனுமதியைத் தரக்கூடாது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மைதானம் அல்லது, மூடப்பட்ட இடத்தில் அவர்களின் கூட்டங்களுக்கு அனுமதி தரலாம். பொது இடங்களில் ரோடு ஷோ நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கிடையில் காவல்துறை டி.ஜி.பி-யிடம் மனு அளித்த த.வெ.க-வினர், என். ஆனந்தின் உத்தரவுப்படி அப்படியே சட்டப்பேரவைக்குச் சென்று முதல்வர் ரங்கசாமியிடமும் அனுமதி கேட்டு மனு அளித்தனர்.
அதை வாங்கிக் கொண்ட முதல்வர் ரங்கசாமி, `பார்க்கிறேன்’ என்ற ஒற்றை வார்த்தையுடன் தன்னுடைய வழக்கமான ஆசியையும் கொடுத்து அனுப்பினார். முதல்வர் ரங்கசாமிக்கு என். ஆனந்தும், நடிகர் விஜய்யும் நண்பர்கள். அதனால் முதல்வர் ரங்கசாமி தங்களுக்குக் கண்டிப்பாக கை கொடுப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் த.வெ.க-வினர்.
















