``சுடுகாட்டுக்கு சாலை இல்லை, சேறு சகதியில் நடந்து போகிறோம்'' - நான்கு தலைமுறையாக...
2011-ல் வரிசையாக 7 தோல்விகள்; அன்று தோனி பேசிய வார்த்தைகள் - `தற்பெருமை’ தான் முக்கியமா கம்பீர்?
டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை அவர்களின் மண்ணில் வீழ்த்துவது, அதிலும் தொடரை வெல்வது இன்றும் கடினம்.
அதைவிட புளியங்கொம்பு என்னவென்றால், இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்வது.
ஆனால், கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு எதிரணிக்கு எளிதான செயலாக இது மாறியிருக்கிறது.

கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவை 3 - 0 என இந்தியாவில் ஒயிட் வாஷ் செய்து சென்றது.
தற்போது தென்னாப்பிரிக்கா அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2 - 0 என இந்தியாவை ஒயிட் வாஷ் செய்திருக்கிறது.
நியூஸிலாந்துடன் தோற்றபோது இந்தியா அணிக்கு ரோஹித் கேப்டனாக இருந்தார். இப்போது தென்னாப்பிரிக்காவுடன் தோற்றபோது சுப்மன் கில் காயத்தால் வெளியேறியதால் பொறுப்பு கேப்டனாக ரிஷப் பண்ட் இருந்தார்.
ஆனால், இதில் மாறாத ஒரே ஆள் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர்தான். டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை அணியில் எடுக்காமல் ஆல்ரவுண்டர் வேண்டும் என வீரர்கள் தேர்வு விவகாரத்தில் இவரின் தலையீடு முதன்மையாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் 9 டெஸ்ட்டில் 5-ல் தோல்வியடைந்திருக்கிறது.
இது இவருக்கு முன்பாக பயிற்சியாளர்களாக இருந்த அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் ஆகியோரின் பதவிக்காலத்தில் (7 ஆண்டுகள்) சொந்த மண்ணில் இந்தியா தோல்வியடைந்த போட்டிகளின் எண்ணிக்கையை விட ஒன்று அதிகம்.
சொந்த மண்ணில் இந்தியாவின் இத்தகைய மோசமாக செயல்பாட்டை நுணுக்கமாக ஆராய வேண்டிய கம்பீரோ, ``சாம்பியன்ஸ் டிராபியை வென்றதும் ஆசிய கோப்பையை வென்றதும் இதே கம்பீர்தான்" என்று தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்துப் பொறுப்பேற்காமல் தற்பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில்தான் சரியாக 14 ஆண்டுகளுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி பேசியவை இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
2011-ல் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு உலகக் கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி, அதே ஆண்டில் இங்கிலாந்தில் 4 - 0 என டெஸ்ட் தொடரை மோசமாக இழந்தது.
அதைத்தொடர்ந்து, அதே ஆண்டு இறுதி மற்றும் தொடக்கத்தில் (டிசம்பர், ஜனவரி) ஆஸ்திரேலியாவில் 4 - 0 (கடைசிப் போட்டியில் மட்டும் தோனி ஆடவில்லை) டெஸ்ட் தொடரை இழந்தது.
அந்தத் தொடரில் பெர்த் மைதானத்தில் 3-வது டெஸ்டில் தோற்று தொடரை இழந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கலந்துகொண்டார்.
அப்போது, `உங்கள் தலைமையில் வெளிநாட்டில் தொடர்ச்சியாக 7-வது தோல்வியை இந்தியா பதிவு செய்திருக்கிறதே' என்று தோனியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த தோனி, ``தோல்விகளுக்கு என்னை நானே பழி சொல்லிக் கொள்கிறேன். நான்தான் அணியின் கேப்டன். நான்தான் முக்கிய குற்றவாளி. எனவே என்னை நானே பழி சொல்லிக் கொள்கிறேன்.
நான் பார்த்த வரையில், நிச்சயமாக நாங்கள் சிறப்பாக செயல்படாத மோசமான கட்டங்களில் இது ஒன்று.

இங்கிலாந்தில் நாங்கள் விளையாடிய 4 போட்டிகளிலும், இங்கு நடந்த 3 போட்டிகளிலும், நாங்கள் போதுமான ரன்களை அடிக்கவில்லை. ஒரேயொரு முறைதான் 350 ரன்களை அடித்தோம்" என்று முழுக்க முழுக்க தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இத்தனைக்கும் அந்த அணியில் சச்சின், டிராவிட், லக்ஷ்மன், சேவாக், ஜாகிர் கான் ஆகிய சீனியர் வீரர்கள் இருந்தனர். கம்பீரும் அந்த அணியில் இருந்தார்.
மேலும், அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் டங்கன் பிளெட்சர் தனது பணியை சரியாகச் செய்தாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கும் தோனி, ``அவர் சிறந்த மனிதர். விளையாட்டைப் பற்றி சிறந்த அறிவைக் கொண்டவர். உலகின் மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களில் அவரும் ஒருவர்.
அவர் பயிற்சியாளராக வந்தபிறகுதான் நாங்கள் இரண்டு தொடர்களை இழந்துவிட்டோம் என்று எல்லாப் பழியும் அவர்மீது சொல்வதல்ல.
ஏனெனில் இறுதியில் வீரர்கள்தான் களத்தில் விளையாடப்போகிறார்கள்" என்று பயிற்சியாளரை நோக்கிய கேள்விக்கும் அவரே முன்னின்றார்.

தோனியின் இந்த ஸ்பீச்சை ரசிகர்களும், விமர்சகர்களும் தற்போது கம்பீரின் தற்பெருமை பேச்சோடு ஒப்பிட்டு, `அன்று இந்தியா மோசமாக தோற்றபோது கடந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்றதும் இதே தோனிதான் என்று பெருமை பேசவில்லை. அணியில் இருக்கும் சீனியர் வீரர்கள் யாரையும் குறை சொல்லவில்லை' என்று கூறி வருகின்றனர்.
சொந்த மண்ணில் இந்தியாவின் இத்தகைய மோசமான தோல்விக்கு யார் தான் பொறுப்பேற்பது, தோல்வியின்போதும் கம்பீரின் தற்பெருமை அணுகுமுறை எத்தகையது? யார் தான் பதில் சொல்வது?



















