``சுடுகாட்டுக்கு சாலை இல்லை, சேறு சகதியில் நடந்து போகிறோம்'' - நான்கு தலைமுறையாக...
TVK : 'விசுவாசம், தவிப்பு, சங்கடம்.!' - பனையூரில் தயங்கி நின்ற செங்கோட்டையன்!
இரண்டு நாட்களாக சென்னையை ரவுண்ட் அடித்து பரபரப்பை கிளப்பிக் கொண்டிருந்த செங்கோட்டையன், இன்று பனையூருக்கு வண்டியை திருப்பிவிட்டார். விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்திருக்கிறார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதில் எவ்வளவு மனவேதனையில் இருந்தேன் என்பது உங்களுக்கு தெரியும் என செய்தியாளர்களிடம் கூறிவிட்டுதான் கோவையிலிருந்து சென்னைக்கு விமானமே ஏறினார்.

ஆனால், இன்று தவெகவில் இணைந்த பிறகும் செங்கோட்டையன் முழுமையாக ஆசுவாசமாக உணர்ந்ததைப் போல தெரியவில்லை. பனையூரில் செங்கோட்டையன் வெளிக்காட்டிய உடல் மொழியிலும் செயல்பாட்டிலும் சின்ன சின்ன தயக்கங்களும் சங்கடமும் இருந்ததை உணர முடிந்தது.
செங்கோட்டையன் எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி. அதிமுகவின் சூப்பர் சீனியர். '1975 இல் கோவையில் பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்தியதற்காக எம்.ஜி.ஆர் என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டினார்.' என செங்கோட்டையன் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கூட பேசியிருந்தார். அத்தனை மூத்த அரசியல்வாதி 50 ஆண்டுகளுக்கு மேல் ஒரே கட்சியில் விசுவாசமாக பயணித்துவிட்டு, இன்னமும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத கட்சியில் இணைவது அத்தனை எளிதான விஷயமல்ல.

செங்கோட்டையனிடம் வெளிப்பட்ட தயக்கமும் இதை அப்பட்டமாக உணர்த்தியது. தவெகவில் இணைவதற்காக காலை 9:50 மணியளவில் ஒரு BMW காரில் வந்திறங்கினார் செங்கோட்டையன். நேற்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பிறகும் காரில் அதிமுக கொடியை கழட்டாமல் இருந்தவர், இன்றைக்கு சட்டைப்பையில் ஜெயலலிதாவின் படத்துடன்தான் விஜய்யை சந்திக்கவே வந்தார்.
செய்தியாளர் சந்திப்பில் இதை ஒரு கேள்வியாகவும் அவரிடம் கேட்டனர். 'இந்த படத்தை எடுத்துட்டா ஒரே நாள்ல எப்படி மாறிட்டான் பாருங்கன்னு நீங்களே பேசுவீங்களே...' என கொஞ்சம் நகைச்சுவையாக தனக்கிருக்கும் நெருடலையும் சங்கடத்தையும் வெளிக்காட்டியிருந்தார்.
அதேமாதிரி, 'அதிமுக கரை வேட்டியை கட்டக்கூடாது என்றுதான் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். படம் வைக்கக்கூடாது என அவர்களால் சொல்ல முடியாது. தவெகவும் ஒரு ஜனநாயக இயக்கம். அதில் யாருடைய படத்தை வேண்டுமானாலும் வைக்கலாம்.' என எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சென்டிமென்டையும் விடாமல் பேசினார்.

அதேமாதிரி, பத்திரிகையாளர் சந்திப்பின் தொடக்கத்தில் ஆதவ் தவெக துண்டை செங்கோட்டையனின் தோளில் போட்டுவிடுவார். அப்போதும் அதை மறுத்து எடுத்துவிடுவார். இத்தனைக்கும் செங்கோட்டையன் பின்னால் நின்று கொண்டிருந்த அவரின் ஆதரவாளர்கள் அத்தனை பேரும் தோளில் தவெக துண்டுடனேயே நின்று கொண்டிருந்தனர். துண்டை மறுத்துவிட்டு, 'வேணாம்ப்பா... கிண்டலடிப்பாங்க.. ' என்றும் ஆதவ்விடம் கூறியிருப்பார். அரைநூற்றாண்டாக அதிமுக கரை வேட்டி கட்டியவர், திடீரென தவெக துண்டை தோளில் போட்டுக் கொண்டால் அதிமுக அபிமானிகளால் தான் எப்படி பார்க்கப்படுவோம் என்கிற தவிப்பு செங்கோட்டையனிடம் இருந்ததையும் அறிய முடிந்தது.
அதேமாதிரி, பத்திரிகையாளர் சந்திப்பில் செங்கோட்டையன் கிட்டத்தட்ட 18 நிமிடங்களுக்கு பேசியிருந்தார். அதில் ஒரு இடத்தில் மட்டுமே விஜய்யை தலைவர் எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார். பெரும்பாலும் அன்பு இளவல் என்றே விஜய்யை அடையாளப்படுத்தவும் செய்தார். 'தளபதின்னு எங்கயும் சொல்லல பாருங்க. ஒரே நாள்ல எப்படி மாற முடியும்...கஷ்டம்தான்...' என சில தவெக நிர்வாகிகளும் செங்கோட்டையனின் தயக்கத்தை புரிந்துகொண்டு முணுமுணுத்தனர்.

விஜய் செங்கோட்டையனை அண்ணன் என்கிறார். ஆனால், செங்கோட்டையனால் விஜய்யை தம்பி, தலைவர், தளபதி என தயக்கமின்றி கூற முடியவில்லை.

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஜரூராக இருந்தனர். விஜய் போட்டு விட்ட துண்டை கடைசி வரை கழட்டாமல் அப்படியே போட்டிருந்தனர். மேடைக்கு முன்பாக முதல் வரிசையில் இடம் பிடிக்கவும், பத்திரிகையாளர் சந்திப்பில் கேமரா ப்ரேமுக்குள் நிற்கவும் அவ்வளவு போட்டி போட்டனர். அதே உற்சாகத்தை செங்கோட்டையனின் முகத்தில் பார்க்க முடியவில்லை.
அதிமுகவின் பெருந்தலைவர்களுக்கு இன்னமும் விசுவாசமாக இருக்கிறேன் என்பதையும் செங்கோட்டையன் பனையூரில் காட்டிவிட்டார் என்று தான் தோன்றியது. அதேநேரத்தில், தவெகவை முழுமையாக ஏற்றுக்கொள்வதில் அவருக்கு இருக்கும் சங்கடத்தையும் தவிப்பையும் கூட அப்பட்டமாக காட்டிவிட்டது எனலாம். நேரத்துக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு வேடத்தை மாற்றி மாற்றி கட்டிக்கொள்வதுதான் அரசியலின் அடிப்படை தகுதி. இது செங்கோட்டையனுக்கு தெரியாத விஷயம் ஒன்றில்லை. இது ஒரு Starting Trouble என்று கூட புரிந்துகொள்ளலாம்.!
















