`உயர்கல்வி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பேசி தீர்வுகாண வேண்டும்' - விஐடி வ...
போதையால் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் - என்ன நடக்கிறது கோவையில்?
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்ன மத்தம்பாளையம் பகுதி உள்ளது. அங்கு தனியார் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. அங்கு 50 வயது வயதான மதிக்கத்தக்க ஒருவர் நேற்று இரவு மது அருந்தியுள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவர் அந்த மனமகிழ் மன்றம் முன்பு சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் உடல் முழுவதும் வெட்டு காயங்கள் இருந்ததால், காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் அவர் கோகுலம் காலனி பகுதியைச் சேர்ந்த சமையல்காரர் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. நேற்று மது அருந்திக்கொண்டிருந்தபோது அவருக்கும், திருமலை நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதனப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து சுரேஷ் மதுபோதையில் அதே இடத்தில் தூங்கிவிட்டார். மனமகிழ் மன்றத்தை மூடுவதற்காக அதன் ஊழியர்கள் சுரேஷை தூக்கி வெளியில் படுக்க வைத்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த தமிழ்ச்செல்வன் மோதலை நினைவில் வைத்து, சுரேஷை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொலை செய்த தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல கணபதி அருகே கஞ்சா போதையில் இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது ஒரு கும்பல் இளைஞர் ஒருவரை சாலையில் கொடூரமாக தாக்கினார்கள். அருகில் இருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
















