திருவள்ளூர்: தொழிற்சாலையில் அமோனியா கசிவு; பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் உயிரிழப்...
மாதப்படி வழக்கு: `மீண்டும் ஆஜராகுங்கள்'-பினராயி விஜயன் மகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை!
கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த சி.எம்.ஆர்.எல் தனியார் நிறுவனம் மற்றும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்சாலோஜிக் சொல்யூசன்ஸ் கம்பெனி இடையேயான பண பரிவர்த்தனை குறித்த வழக்கை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. மாதப்படி வழக்கு என பிரபலமாக அறியப்படும் இந்த வழக்கில் கடந்த ஜூன் 17-ம் தேதி கொச்சி இ.டி அலுவலகத்தில் ஆஜரான வீணா விஜயனிடம் அமலாக்கத்துறை சுமார் 10 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியிருந்தது. 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திடம் இருந்து எக்சாலோஜிக் நிறுவனம் ரூ. 2.78 கோடி கன்சல்டன்சி கட்டணமாகப் பெற்ற விவகாரம் குறித்து அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால், பெரும்பாலான கேள்விகளுக்குத் தெளிவான பதிலளிக்காமல், "மனதில் இல்லை" என்றும், "அன்றைய விஷயங்கள் நினைவில் இல்லை" என்றும் வீணா கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கன்சல்டன்சி பிசினஸ் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பெங்களூரு அலுவலகத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். வீணாவின் பதில்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கருதும் அமலாக்கத்துறை, அதை உறுதிப்படுத்தும் விதமாகவே மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது.

வீணா விஜயன் நிறுவனம் சம்பந்தமான விவகாரம் குறித்து அமலாக்கத்துறை மற்றும் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO) ஏற்கனவே பலகட்ட ஆதாரங்களைச் சேகரித்துள்ளது. எக்சாலோஜிக் நிறுவனம் எந்தவொரு குறிப்பிட்ட சேவையையும் வழங்காமல் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திடம் இருந்து ரூ.2.78 கோடி பெற்றுள்ளது. மேலும் எக்சாலோஜிக் நிறுவனத்தின் சகோதர நிறுவனத்தின் கணக்கிலிருந்து ரூ.50 லட்சம் கடனாகப் பெறப்பட்டுள்ளது. இந்தத் தொகை அனைத்தும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 'குற்றத்தின் மூலம் ஈட்டப்பட்ட வருமானம்' என்று கருதப்படுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்தும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள எச்.டி.எப்சி வங்கியில் வீணா விஜயனின் கணக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். மேலும், பினராயி விஜயனின் வீடுகள் மற்றும் சி.எம்.ஆர்.எல் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. எஸ்.எஃப்.ஐ.ஓ மற்றும் அமலாக்கத்துறை இதுவரை திரட்டியுள்ள ஆவணங்கள், ஆதாரங்கள் மற்றும் முன்னதாக வீணா அளித்த வாக்குமூலங்களை ஒப்பிட்டுப் பார்த்த பிறகே, மீண்டும் ஒருமுறை அவரை அழைத்து விசாரணை செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். தொடர் விசாரணை, இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.


















