இந்தியா கூட்டணி: ``மோடி அரசை வீழ்த்த ஒற்றுமை அவசியம்!" - மல்லிகார்ஜுன கார்கே
மும்பை தமிழர்களின் நீண்டநாள் கனவு; `தமிழ்நாடு பவன்' அமைய த.வெ.க அரசு உதவுமா?
மும்பையில் அனைத்து மாநிலங்களுக்கும் விருந்தினர் விடுதி எனப்படும் கேரளா பவன், அஸ்ஸாம் பவன் என்று இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு மட்டும் மும்பையில் அது போன்ற ஒன்றை இது வரை கட்டவில்லை. இதற்கு தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அதிமுக மற்றும் திமுக அரசுகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் இருந்தது. அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு பவன் கட்டுவதற்கு தேவையான நிலத்தை நவிமும்பை பகுதியில் தமிழ்நாடு அரசின் நிதியில் வாங்கினர். ஆனால் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அரசு இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
அதோடு மும்பையில் உள்ள அரசியல்வாதிகளிடையே தமிழ்நாடு பவனை எங்கு அமைப்பது என்பதில் மாறுபட்ட கருத்து ஏற்பட்டது. இதனால் அத்திட்டம் அப்படியே கிடப்பில் உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்று இருக்கிறது. இந்த அரசாவது மும்பையில் தமிழ்நாடு பவன் கட்ட உதவவேண்டும் என்று மும்பை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அவர்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக மகாராஷ்டிரா மாநில தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொறுப்பாளர் அ.அழகுசுந்தரம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த்தை தலைமைச் செயலகத்தில் சந்தித்து முக்கிய கோரிக்கை மனுவை வழங்கினார்.
அப்போது மராட்டிய மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், மும்பையில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களின் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, மும்பையில் தமிழ்நாடு பவன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் என். ஆனந்த், சம்பந்தப்பட்ட (தமிழ்நாடு பவன் ) துறை அதிகாரிகளிடம் மனுவை விரைவாக பரிசீலனை செய்து, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது த.வெ.க. மாநில நிர்வாகிகள் வி.எஸ். ராஜகோபாலன், அண்ணா ஆலிவர் ரூபன் மற்றும் சுபாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக சென்னை பயணத்தின் போது பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், நிர்மல்குமார், வெங்கடரமணன், தமிழன் விஜய் பார்த்திபன், விஜய் பாலாஜி, சம்பத்குமார், விக்னேஷ்வரன், ஜெகதிஸ்வரி மற்றும் காந்திராஜ் ஆகியோரையும் அ. அழகுசுந்தரம் சந்தித்து மாநில வளர்ச்சி மற்றும் அமைப்பு பணிகள் குறித்து கலந்துரையாடினார்.




















