சேலம் திமுக நிர்வாகி கொலை: ``ரூ. 5000-க்கு துப்பாக்கிகள் கிடைக்கின்றன" - அன்புமண...
`ராஜ் தாக்கரே வேண்டும்’ உத்தவ் உறுதி; காங்கிரஸ் முட்டுக்கட்டை - சரத் பவார் சமாதானம் கைகொடுக்குமா?
மகாராஷ்டிராவில் தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ம் தேதி நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தல் முடிந்த பிறகு அடுத்த கட்டமாக ஜனவரி மாதம் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி சேருவதில் உறுதியாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் தற்போது சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்), காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இக்கூட்டணி கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அதோடு காங்கிரஸ் கட்சி பீகார் சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது.

இதையடுத்து மும்பை மாநகராட்சி தேர்தலில் ராஜ் தாக்கரேயையும் சேர்க்க வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார். மும்பை மாநகராட்சி தேர்தல் கூட்டணியில் ராஜ் தாக்கரேயை சேர்க்க ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி தயக்கம் காட்டி வருகிறது.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சி மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று வெளிப்படையாக அறிவித்தது. இது உத்தவ் தாக்கரேவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. எனவே தாராளமாக காங்கிரஸ் தனித்து போட்டியிடலாம் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். ராஜ் தாக்கரே கட்சி ஆரம்பத்தில், மாநிலத்தில் உள்ள வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு மராத்தி பேசாதவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதோடு மசூதிகளில் ஒலிபெருக்கி வைக்கவும் எதிர்ப்பு தெரிவித்தது.
இது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி இனம், மொழி அடிப்படையில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க முடியாது என்று மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
ஆனால் மும்பையை எப்படியும் மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருப்பதால்தான் தனது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
``காங்கிரஸ் இவ்விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் நாங்கள் காங்கிரஸ் அல்லது மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் இடம் பெறவில்லை” என்று நவநிர்மாண் சேனா மூத்த தலைவர் சந்தீப் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,''காங்கிரஸ் அல்லது மகாவிகாஷ் அகாடியுடன் கூட்டணி சேருவதற்கான எந்த திட்டமும் இதுவரை வரவில்லை. எங்களது கட்சி சுதந்திரமான ஒன்று. மகாவிகாஷ் அகாடியில் எங்களது கட்சி ஒருபோதும் இடம் பெற்றதில்லை. எங்கள் தரப்பிலிருந்து கூட்டணியில் சேர விருப்பமோ ஆர்வமோ தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கும்போது வர்ஷா கெய்க்வாட் அல்லது சரத் பவார் இது குறித்து பகிரங்கமாக விவாதித்து, கூட்டணிக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தங்கள் கருத்துக்களை வெளியிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
மகாவிகாஷ் அகாடியில் சேர நாங்கள் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவும் இல்லை. ராஜ் தாக்கரே இது தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பார். மற்ற கட்சிகள் மற்றும் அவர்களின் தலைவர்களின் அனைத்து விவாதங்களும் எதிர்வினைகளும் கற்பனையானவை'' என்று கூறினார்.

எனவே சரத் பவார் கட்சியை தங்களுடன் கூட்டணியில் சேர்த்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டு காய் நகர்த்தியது. ஆனால் சரத் பவார் வாக்குகள் பிரிவதை தடுக்க ராஜ் தாக்கரேயை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாம் என்று காங்கிரஸ் கட்சியிடம் பேசி வருகிறார். ராஜ் தாக்கரே கட்சியும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும் மும்பை, புனே, தானே, நாசிக் ஆகிய மாநகராட்சிகளில் மட்டும் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளது.
மற்ற மாநகராட்சிகளில் எதிர்க்கட்சிகளின் நிலை என்ன என்பது கேள்விகுறியாகி இருக்கிறது. மும்பை மாநகராட்சி தேர்தல் கூட்டணி இழுபறியில் இருப்பதால் மற்ற மாநகராட்சிகளிலும் முடிவு எடுக்க முடியாமல் எதிர்க்கட்சி கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. இதனால் மாநகராட்சி காங்கிரஸ் நிர்வாகிகள் இவ்விவகாரத்தில் கட்சியின் அடுத்த கட்ட முடிவுக்காக காத்திருக்கின்றனர். டிசம்பர் முதல் வாரத்தில் மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது.















