Japan: "வேலையை முடிக்காமல் வீட்டுக்குப் போக முடியாது" - ஜப்பானிலுள்ள இந்த வினோத ...
பச்சை நிறமாக மாறிய மேட்டூர் அணை - கர்நாடகா தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுகிறதா?
கர்நாடகா மாநிலத்தில் இருந்து காவிரி ஆற்றில், மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பருவமழை காலத்தில் காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் திறந்து விடப்படுவதாக மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவிரி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் நீர் மாசுபடுவதோடு, காவிரி நீர் பச்சை நிறத்தில் மாறி துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி சுப்பிரமணி, ``காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கும் போது கர்நாடகா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை கழிவு நீர்கள் கலந்து விடப்படுகிறது. இதனால், நீர் மாசுபாடு ஏற்படுவதோடு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதேபோல், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலமாக தான் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் நடைபெறுகிறது. காவிரி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தரமற்ற முறையில் இருப்பதால் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. விவசாயத்தைப் பொறுத்தவரை துர்நாற்றம் வீசும் நீரினால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு காவிரி நீர் மாறி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று கூறினார்.
இது குறித்து மேட்டூர் அணை செயற்பொறியாளர் சதீஷிடம் கேட்டபோது, 'மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் போது நீரின் நிறம் மாறுவது இயல்பான ஒன்றுதான். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் சிலர் ஆற்றங்கரையில் விவசாயம் செய்கின்றனர். நீர்வரத்து அதிகரிக்கும்போது மரம், செடி, கொடிகள் நீரில் அடித்து வரப்படுகிறது. இது ஒரு வாரத்தில் பழைய நிலைக்கு திரும்பிவிடும். கர்நாடகாவில் இருந்து தொழிற்சாலை கழிவுகள் காவிரியில் கலக்கப்படுகிறதா என தெரியவில்லை. நாங்கள் குடிநீருக்கு உகந்த நிலையில் தண்ணீர் உள்ளதா என்பதை மட்டும்தான் பார்ப்போம்.

அதன்படி தற்போது உள்ள நீர் குடிநீருக்கு ஏற்றதாக உள்ளது. தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுகிறதா? என்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தண்ணீரின் மாதிரியே சேகரித்து ஆய்வு செய்வார்கள்' என தெரிவித்தார்.

மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி சதீஷ் கூறுகையில், 'மேட்டூரில் உள்ள தொழிற்சாலைகளில் கடந்த வாரம் ஆய்வுகள் நடத்தப்பட்டது. மேட்டூரில் இருந்து காவிரி ஆற்றில் தொழிற்சாலையின் கழிவுகள் கலப்பதில்லை. மேட்டூர் அணையில் உள்ள நீர் பச்சை நிறத்தில் மாறி உள்ளது தொடர்பாக தண்ணீரின் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. விவசாயக் கழிவுகளால் தான் நிறம் மாறியுள்ளதாக ஆய்வு முடிவுகள் வந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து தொழிற்சாலை கழிவுகள் காவிரி ஆற்றல் கலக்கப்படுகிறதா என்பது குறித்து தெரியவில்லை. ஆய்வு முடிவுகளும் அப்படி வரவில்லை' என்றார்.


















