ஜடாயு மலையில் ஒரு திக்திக் அனுபவம் – ஆன்மீகமும் சாகசமும் நிறைந்த வர்கலா
ஹைதராபாத்தில் வரவிருக்கும் 'டொனால்ட் ட்ரம்ப் சாலை' - ரேவந்த் ரெட்டி முடிவுக்கு பாஜக எதிர்ப்பு!
'தெலங்கானா ரைசிங் குளோபல் உச்சி மாநாட்டிற்கு' (Telangana Rising Global Summit) முன்னதாக, உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் நோக்கில், அந்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் உள்ள ஒரு முக்கியச் சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரைச் சூட்ட முன்மொழிந்துள்ளார்.
நகரத்தில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் அருகே செல்லும் அந்த முக்கியச் சாலைக்கு "டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ" என்று பெயரிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராகப் பதவியில் இருப்பவருக்கு, அமெரிக்காவுக்கு வெளியே கௌரவம் அளிக்கும் வகையில் ஒரு சாலைக்கு அவர் பெயரிடப்படுவது உலகிலேயே இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

தெலங்கானா மாநிலம், அரசியல் தலைவர்களைத் தவிர, ஹைதராபாத்தைத் தொழில்நுட்ப மையமாக மாற்றுவதற்குப் பங்களித்த உலகளாவிய வணிக மற்றும் தொழில்நுட்ப முன்னோடிகளையும் கௌரவிக்கும் வகையில், சாலைகளுக்குப் பெயரிட முடிவெடுத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, அங்குள்ள ஒரு முக்கியச் சாலைக்கு "கூகுள் தெரு" என்று பெயரிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, "மைக்ரோசாஃப்ட் சாலை" மற்றும் "விப்ரோ சந்திப்பு" போன்ற பிற உலகளாவிய பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.
மேலும், ராவிரியாலாவில் உள்ள நேரு வெளிவட்டச் சாலையை, முன்மொழியப்பட்ட 'ஃபியூச்சர் சிட்டி'யுடன் இணைக்கும் 100 மீட்டர் பசுமைவெளி வட்டச் சாலைக்கு (Greenfield Radial Road) பத்ம பூஷன் ரத்தன் டாடாவின் பெயரைச் சூட்டவும் மாநில அரசு முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே, ராவிரியாலா இன்டர்சேஞ்சுக்கு "டாடா இன்டர்சேஞ்ச்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
உலகளாவிய செல்வாக்கு மிக்க நபர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் பெயர்களைச் சாலைகளுக்குச் சூட்டுவது இரண்டு நோக்கங்களுக்கு உதவுகிறது என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். இது அந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிப்பதுடன், ஹைதராபாத்தை உலகளாவிய அங்கீகாரத்தின் ஒரு உயர் மட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜக எதிர்ப்பு
இருப்பினும், மத்திய அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான பண்டி சஞ்சய் குமார், ரேவந்த் ரெட்டியைக் கடுமையாகச் சாடினார். "ஹைதராபாத்துக்கு மீண்டும் 'பாக்யநகர்' என்று பெயர் சூட்ட வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
"பெயர்களை மாற்றும் ஆர்வம் காங்கிரஸ் அரசுக்கு மிகவும் இருந்தால், உண்மையான வரலாறும் அர்த்தமும் உள்ள ஒன்றில் இருந்து தொடங்கலாம்" என்று அவர் தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
ரேவந்த் ரெட்டி "யாரெல்லாம் டிரெண்டிங்கில் இருக்கிறார்களோ" அவர்களுக்குப் பெயரிட்டு வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.















