மும்பை மாநகராட்சி தேர்தல்: மராத்தியர்களை (மட்டும்) தக்கவைத்துக்கொண்ட தாக்கரே சக...
'5 ஏக்கர் ரூ.37.9 கோடி' - கோலியின் முதலீடு; அலிபாக் நகரில் பாலிவுட் நடிகர்கள் குவியக் காரணம் என்ன?
கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.
மும்பையில் வசித்து வந்த விராட் கோலி தம்பதி இப்போது இங்கிலாந்தில் குடியேறியிருக்கின்றனர். அவர்கள் இருவரும் மகாராஷ்டிராவின் அலிபாக் நகரில் 5 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியிருக்கின்றனர்.
மும்பையின் தென்பகுதியில் இருந்து படகு மூலம் அலிபாக்கிற்குச் செல்ல முடியும். அலிபாக்கில் ஏற்கனவே நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலரும் நிலத்தில் முதலீடு செய்திருக்கின்றனர்.
தற்போது நவிமும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்ட பிறகு அலிபாக் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அலிபாக் அருகில் உள்ள ஜிராட் என்ற கிராமத்தில் அடுத்தடுத்து இருந்த 5 ஏக்கர் கொண்ட இரண்டு நிலங்களை ரூ.37.9 கோடிக்கு விராட் கோலி தம்பதி விலைக்கு வாங்கியிருக்கின்றனர்.

இதற்கான பத்திரப் பதிவு ஜனவரி 13ம் தேதி நடந்துள்ளது. இதற்கு விராட் கோலி தம்பதி முத்திரை தீர்வைக் கட்டணமாக ரூ.2.27 கோடி செலுத்தி இருக்கின்றனர்.
சோனாலி அமித் ரஜபுத் என்பவரிடமிருந்து இந்த நிலத்தை வாங்கியுள்ளனர். 2022ம் ஆண்டு ஏற்கனவே இதே கிராமத்தில் 8 ஏக்கரில் பண்ணை வீடு ஒன்றை ரூ.19 கோடிக்கு விராட் கோலி தம்பதி வாங்கினர்.
சமீப காலமாக அலிபாக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பாலிவுட் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே அவர்கள் அதிக அளவில் இங்கு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகின்றனர். 2023ம் ஆண்டு, ஷாருக்கானின் மகளான நடிகை சுஹானா கான், அலிபாக்கில் மூன்று பிளாட்களை (2.79 ஏக்கர்) ரூ.25.5 கோடிக்கு வாங்கினார்.
அலிபாக்கில் தென்னந்தோப்பு, பண்ணை வீடு உட்பட ஏராளமான சொத்துகள் ஷாருக்கானுக்கு இருக்கின்றன. நடிகை தீபிகா படுகோனே மற்றும் அவரது கணவர் ரன்வீர் சிங் ஆகியோர் அலிபாக்கில் அதிக முதலீடு செய்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு அவர்கள் எவர்ஸ்டோன் குழுமத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஜக்கி என்பவரிடமிருந்து ரூ.22 கோடிக்கு அலிபாக்கில் உள்ள மாப்கான் கிராமத்தில் ஒரு வீட்டை வாங்கினார்கள்.
இதற்கு முன்பு 2021ம் ஆண்டு அலிபாக்கில் கடற்கரையையொட்டிய 6 ஏக்கர் நிலம் ரூ.80 கோடிக்கு விற்பனையானது. கொரோனா காலத்தில் அதிகமானோர் அலிபாக்கில் நிலம் வாங்க ஆரம்பித்தனர்.



















