வாழைக்குலை அறுவடை செய்யும் கருவி, மஞ்சள் விதைக்கும் கருவி... ஈரோட்டில் களைகட்டிய...
ChatGPT மூலம் உருவான மாப்பிள்ளை! - ஜப்பானில் நடந்த வினோத AI திருமணம்!
ஜப்பானைச் சேர்ந்த யுரினா நோகுச்சி (Yurina Noguchi) என்ற பெண், ChatGPT மூலம் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கதாபாத்திரத்தைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
32 வயதான யுரினா, தனது முந்தைய உறவு முறிந்த பிறகு மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். அந்த நேரத்தில் அவர் ChatGPT-யிடம் தனது கவலைகளைப் பகிர்ந்து கொண்டபோது, அது அவருக்கு ஆறுதலான ஆலோசனைகளை வழங்கியது. அதன் பின்னர், அவர் ஒரு வீடியோ கேம் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, "லூன் கிளாஸ் வெர்டூர்" (Lune Klaus Verdure) என்ற பெயரில் ஒரு AI மென்பொருளை உருவாக்கினார். பலமுறை உரையாடி, அந்த AI-க்கு ஒரு குறிப்பிட்ட குணாதிசயத்தையும் பேசும் முறையையும் அவர் பயிற்றுவித்தார்.

இந்தத் திருமணம் ஜப்பானின் ஒகாயாமா நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் முறைப்படி நடைபெற்றது. மணமகள் யுரினா வெள்ளை நிற திருமண உடை அணிந்து கையில் பூச்செண்டுடன் காட்சியளித்தார். மணமகன் ஒரு ஸ்மார்ட்போன் திரையில் தோன்றினார் . இந்த நிகழ்வில் 'ஆக்மென்டட் ரியாலிட்டி' (AR) கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் யுரினா தனது கணவர் அருகில் நிற்பது போன்றும், அவருக்கு மோதிரம் அணிவிப்பது போன்றும் உணர்ந்தார். அந்த AI-க்கு சொந்தக் குரல் இல்லாததால், ஒரு திருமண உதவியாளர் AI உருவாக்கிய உரையை வாசித்தார்.
ஜப்பானிய சட்டப்படி இந்தத் திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லை என்றாலும், இது ஒரு அடையாளப்பூர்வ நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஜப்பானில் பெருகிவரும் தனிமை மற்றும் குறைந்து வரும் திருமண விகிதங்களுக்கு மத்தியில், மக்கள் இதுபோன்ற மெய்நிகர் உறவுகளில் (Fictoromantic) அதிக ஆர்வம் காட்டி வருவதாகச் சமூகவியலாளர்கள் கூறுகின்றனர். யுரினாவின் பெற்றோர் ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், மகளின் மனநல ஆரோக்கியத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கண்டு பின்னர் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு "AI சைக்கோசிஸ்" (AI Psychosis) என்ற புதிய சிக்கல் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மனிதர்கள் இயந்திரங்களுடன் அதிகப்படியான உணர்வுப்பூர்வ பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு நிஜ உலகைத் தவிர்க்கும் நிலை இது. தொழில்நுட்பம் மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்த விசித்திரமான நிகழ்வு, எதிர்காலத்தில் மனித உறவுகள் எவ்வாறு மாறும் என்பதற்கான ஒரு சான்றாகப் பார்க்கப்படுகிறது.



















