`பொய் வழக்கு; தமிழ்நாடு உள்துறை ரூ.8 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ - உயர் நீ...
Imran Khan:``இம்ரான் கான் உயிரோடு இருக்கிறாரா?" - பாகிஸ்தான் அரசு கூறும் பதில் என்ன?
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2022ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதிகாரப்பூர்வ பரிசுப் பொருட்களை ஒப்படைக்காமை, நிலம் தொடர்பான ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்களால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த வாரம் இம்ரான் கானைச் சந்திக்க அவரது சகோதரிகள் அடியாலா சிறைக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் காவல்துறையால் தடுக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும், இம்ரான் கானைச் சந்திக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இம்ரான் கானின் சகோதரிகள் ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது, "இம்ரான் கான் உயிரோடு இருக்கிறாரா என்பதைக் எங்களுக்குத் தெரியவில்லை. அவரது உடல்நிலை குறித்தும் எங்களுக்கு அச்சம் உள்ளது. அவரைச் சந்திக்க முயன்றபோது எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதனால் காவல்துறைக்கு எதிராகக் கோஷம் எழுப்பினோம். அப்போது தெருவில் விளக்குகள் அணைக்கப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டோம்," எனக் குறிப்பிட்டிருந்தனர்.
அதைத் தொடர்ந்து, இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தொண்டர்கள் கடந்த ஒரு மாதமாக இம்ரான் கானைச் சந்திக்க முடியவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அடியாலா சிறை நிர்வாகம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டி சிறைக்குள் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்.
அடியாலா சிறையிலிருந்து அவர் மாற்றப்பட்டதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை," எனக் குறிப்பிட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், "முன்னாள் பிரதமர் முந்தைய கைதிகள் எதிர்கொண்டதைவிட மிகவும் வசதியான சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்படும் உணவின் மெனுவைப் பாருங்கள் – அது ஐந்து நட்சத்திர ஹோட்டலிலும் கிடைக்காது.
அவருக்கு ஒரு தொலைக்காட்சி, உடற்பயிற்சி உபகரணங்கள், இரட்டைப் படுக்கை, வெல்வெட் மெத்தை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. நான் சிறையில் இருந்தபோது குளிர்ந்த தரையில் தூங்கினோம், சிறை உணவைச் சாப்பிட்டோம், சூடான நீரும் கொடுக்கப்படவில்லை. இரண்டு போர்வைகள் மட்டுமே இருந்தன," எனத் தெரிவித்திருக்கிறார்.

















