`பொய் வழக்கு; தமிழ்நாடு உள்துறை ரூ.8 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ - உயர் நீ...
வெள்ளை மாளிகை வாசலில் துப்பாக்கிச் சூடு: பெண் காவலர் பலி; `பைடன்தான் காரணம்' -ட்ரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில், தேசிய காவல்படை உறுப்பினர்களான சிறப்பு நிபுணர் சாரா பெக்ஸ்ட்ரோம், ஸ்டாஃப் சார்ஜென்ட் ஆண்ட்ரூ வுல்ஃப் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒருவர் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களைத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் இரு பாதுகாப்பு வீரர்களும் கடுமையாகக் காயமடைந்தனர்.

அவர்களுக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சாரா பெக்ஸ்ட்ரோம் உயிரிழந்தார். மற்றொரு காவல்துறை நிபுணர் சிகிச்சையில் இருக்கிறார். இந்த நிலையில், வெள்ளை மாளிகை அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.
இது தொடர்பாக வெளியான செய்தியில், இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரஹ்மானுல்லா (29). இவர் 2021-ல் அமெரிக்காவில் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் பயங்கரவாதச் செயல் குற்றச்சாட்டில் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) விசாரணையில் இருக்கிறார்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம், அகதிகள் வருகையைக் காட்டும் ஒரு விமானப் படத்தைக் காட்டி, "மிகவும் ஆபத்தான மற்றும் குற்றப் பின்னணி கொண்ட மக்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு வந்தார்கள். அமெரிக்கா விரும்பும் தகுதியான நல்லவர்கள் அல்ல.
தற்போது இந்த நிலைமை குழப்பமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. சந்தேக நபர் ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டவர். அவரை ஜோ பைடன் அரசுதான் இங்குக் கொண்டு வந்தது.
அமெரிக்காவுக்குள் வரும் மக்களைக் கட்டுப்படுத்துவதைவிடப் பெரிய பாதுகாப்புப் பிரச்னை எதுவும் இல்லை. உண்மையைச் சொன்னால், இப்படிப்பட்டவர்களை நாங்கள் இங்கு விரும்பவில்லை" என்றார்.

















