BB Tamil 9: `அவர் அப்படித்தான் பேசுவார்' பிரஜின் விவகாரத்தில் முன்கூட்டியே கணித்...
IND v SA: "அதுதான் நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு" - தோல்வி குறித்து ரிஷப் பண்ட்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 408 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி இமாலய வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடக்கிறது.
முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 489 ரன்களும், இந்திய அணி 201 ரன்களும் எடுத்தன.
288 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதன்மூலம், இந்தியாவுக்கு 549 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது தென்னாப்பிரிக்க அணி.
இலக்கைத் துரத்திய இந்திய அணி, 5-ம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 140 ரன்களுக்குச் சுருண்டது.

இதன் மூலம் 408 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது தென்னாப்பிரிக்க அணி.
இதன்மூலம், 25 ஆண்டுகளுக்குப் பின் இந்திய மண்ணில் தொடரை வென்றுள்ளது. மேலும் தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட் வாஷ் செய்திருக்கிறது.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய ரிஷப் பண்ட் (இந்தப் போட்டிக்கு மட்டும் கேப்டன்), "இந்தத் தோல்வி ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. ஒரு அணியாக நாங்கள் இன்னும் மேம்பட வேண்டும்.
இந்தத் தொடரில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு, ஒரு அணியாக ஒன்றுபட்டு நிற்க வேண்டும். தொடர் முழுவதும் தென்னாப்பிரிக்க அணி ஆதிக்கத்தைச் செலுத்தியது.

போட்டியில் சில சமயங்களில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு வந்தோம். ஆனால் அந்த நல்ல தருணங்களை எங்களால் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.
அதுதான் நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு. சொந்த மண்ணில் ஆடுகிறோம் என்றாலும், கிரிக்கெட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எதிர்காலத்தில் தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு செயல்படுவோம்" என்று பேசியிருக்கிறார்.



















