"தூய்மைப் பணியாளர் பிர்ச்னையைக் கேட்டு விஜய் வருத்தம்; போராட்டம் வெடிக்கும்" - ஆ...
வேலூர்: பெண் சிசுவை கால்வாயில் வீசிய தந்தை, பாட்டி கைது; நல்லடக்கம் செய்த போலீஸ் - நடந்தது என்ன?
வேலூர் அரசு `பென்ட்லேண்ட்’ பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில், நேற்று முன்தினம், பச்சிளம் பெண் சிசுவின் சடலம் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்து பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வேலூர் தெற்கு காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து சிசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை பகுதியிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்தைச் சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். மேலும், பென்ட்லேண்ட் மருத்துவமனையில் கடந்த 22-ம் தேதிக்குப் பிறகு பிறந்த குழந்தைகளின் விவரங்களையும் சேகரித்தனர்.

அதில், கால்வாயில் வீசப்பட்ட சிசு, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகிலுள்ள தாழனூரைச் சேர்ந்த பெயின்டர் தொழிலாளி வினோத் (28) மற்றும் அவரின் மனைவி முனியம்மாள் (25) ஆகியோருக்கு பிறந்தது எனத் தெரியவந்தது. முனியம்மாள் டிஸ்சார்ஜ் செய்யப்படாமல் தொடர் சிகிச்சை பெற்று வருவதையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அவரின் கணவன் வினோத் மற்றும் மாமியார் சுமதி (55) ஆகிய இருவரையும் பிடித்து போலீஸார் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். படுபாதக செயலில் ஈடுபட்டதை இருவரும் ஒப்புக்கொண்டனர்.
அதாவது, வினோத் - முனியம்மாள் தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக கருத்தரித்த முனியம்மாளுக்கு வயிற்றுக்குள் குழந்தையின் அசைவு இல்லாமல் இருந்திருக்கிறது. இதையடுத்து, கடந்த 22-ம் தேதி வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தபோது, சிசு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

அன்று காலை 11.30 மணியளவில், அறுவை சிகிச்சை மூலம் பெண் சிசுவின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. மருத்துவர்கள் சிசுவின் உடலை தந்தை வினோத்திடம் ஒப்படைத்திருக்கின்றனர். சொந்த கிராமத்துக்கு சிசுவின் உடலை எடுத்துச்சென்று நல்லடக்கம் செய்ய விரும்பாத வினோத்தும், அவரின் தாய் சுமதியும் மருத்துவமனைக்கு அருகிலுள்ள கால்வாயில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அன்று மழை பெய்த காரணத்தினால், கழிவுநீர் கால்வாயில் தண்ணீரும் அதிகமாக இருந்திருக்கிறது. அதில், சிசுவின் உடல் மூழ்கி, 2 நாள்களாக மிதந்து வந்ததும் தெரியவந்தது.
நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இக்கொடூர விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், கல்நெஞ்சம் கொண்ட வினோத்தையும் அவரின் தாய் சுமதியையும் கைது செய்தனர். மேலும், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிசுவின் உடலைப் பெற்று போலீஸாரே வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் நல்லடக்கம் செய்து மலர் தூவினர்.

















