மீண்டும் H-1B விசாவிற்கு வந்த சோதனை; ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த நெருக்கடி என்ன...
`தூங்க கூட நேரம் கிடைக்கவில்லை’ - தண்ணீர் தொட்டியில் வீசி குழந்தையைக் கொன்ற தாய்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டித்தோப்பு துணை மின்நிலையம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா (27). ஷு கம்பெனி தொழிலாளி. இவரின் மனைவி அஸ்லியா தஸ்மின் (23). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஹர்பா பாத்திமா எனப் பெயர் வைத்தனர்.
அக்பர் பாஷா தனது குடும்பத்துடன் அதே பகுதியிலுள்ள அமீர் பாஷா என்பவரின் வீட்டு மேல்மாடியில் வாடகைக்கு வசித்து வருகிறார். நேற்று காலை, அக்பர் பாஷா வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மனைவி அஸ்லியா தஸ்மின், குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார்.

மதியம் 12 மணியளவில், வீட்டில் இருந்த 3 மாத பெண் குழந்தை மாயமாகிவிட்டதாகக் கூறி அஸ்லியா தஸ்மின், தரை தளத்தில் வசிக்கும் வீட்டு உரிமையாளரிடம் சென்று கூறியுள்ளார். அஸ்லியா தஸ்மினுடன் சேர்ந்து வீட்டு உரிமையாளரும் குழந்தையை தேடியுள்ளார். அப்போது, சந்தேகப்பட்டு வீட்டு படிக்கட்டின் கீழுள்ள தண்ணீர்தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். அதில், மர்மமான முறையில் குழந்தை இறந்துகிடந்தது.
இதையடுத்து, குழந்தையை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து, ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தியதில் சந்தேக வலையில் குழந்தையின் தாய் அஸ்லியா தஸ்மீனே சிக்கினார்.

கிடுக்கிப்பிடி விசாரணையில், பெற்றெடுத்த குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்ததை அஸ்லியா தஸ்மின் ஒப்புக்கொண்டார். 3 குழந்தைகளை வளர்க்க முடியாததாலும், தூங்க கூட நேரம் இல்லாததாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி குழந்தையை கொல்லும் முடிவுக்கு வந்ததாக அஸ்லியா தஸ்மின் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதையடுத்து, அவரைக் கைதுசெய்த போலீஸார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்திருக்கின்றனர். பெற்றத் தாயே கைக்குழந்தையை கொடூரமாக கொன்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




















