பிஞ்சு உயிரைக் கொன்ற வன்கொடுமை: `மறைக்க முயன்ற அதிகாரிகள்; தூங்கும் காவல்துறை' -...
IPL: டிரெஸ்ஸிங் ரூமில் தடை செய்யப்பட்ட E-Cigarette பயன்படுத்திய ரியான் பராக்? தீயாய் பரவும் வீடியோ
ஐபிஎல் தொடரில் நேற்று(ஏப்ரல்28) பஞ்சாப் vs ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி முலன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் டிரெஸ்ஸிங் ரூமில் 'வேப்' (ஈ - சிக்ரெட்) பயன்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?
போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் 16-வது ஓவரின்போது, கேமரா டிரெஸ்ஸிங் ரூம் பக்கம் திரும்பியபோது அணியின் கேப்டன் ரியான் பராக் , டிரெஸ்ஸிங் ரூமில் 'வேப்' பயன்படுத்திய காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
IPL நடத்தை விதிகளில் 'வேப்பிங்' குறித்து நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்திய சட்டப்படி இது ஒரு கடுமையான குற்றமாகும்.
இந்தியாவில் 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மின்னணு சிகரெட் தடைச் சட்டத்தின் (PECA) படி, இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது.
IPL போட்டிகள் நடக்கும் அனைத்து மைதானங்களும் 'புகைபிடிக்கத் தடைசெய்யப்பட்ட' இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மைதானத்திற்குள் நுழையும்போதே லைட்டர், தீப்பெட்டி அல்லது மின்னணு புகைபிடிக்கும் கருவிகள் கொண்டுவரக் கூடாது எனத் தடை உள்ளது.

இந்தச் செயல் கிரிக்கெட்டின் மரியாதையைக் குலைப்பதாகக் கருதப்பட்டால், IPL விதி 2.2-ன் கீழ் ரியான் பராக் மீது போட்டி நடுவர் நடவடிக்கை எடுக்கலாம். அபராதம் முதல் சஸ்பெண்ட் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
நடப்பு 2026 IPL தொடரில் தோல்வியே சந்திக்காத பஞ்சாப் கிங்ஸ் அணியை, அவர்களின் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. 223 ரன்கள் என்ற இலக்கை விரட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்றது. இதில் ரியான் பராக் 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.
புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், இந்த 'ஆஃப்-ஃபீல்ட்' சர்ச்சை அணிக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிக்கலில் மாட்டுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக, அணி மேலாளர் ரோமி பிந்தர், டக்-அவுட்டில் அமர்ந்து மொபைல் போன் பயன்படுத்தியது விதிமீறலாகக் கருதப்பட்டு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது கேப்டனே சர்ச்சையில் சிக்கியுள்ளது அந்த அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.




















