நெல்லை: தொடரும் கனமழை; அருவி சுற்றுலாத் தலங்கள் மூடல்; வாழை பயிர்கள் சேதம் #Rain...
S.I.R : 'திமுகவின் மேஜையில் தேர்தல் ஆணையத்தின் BLOக்கள்!' - கடுமையாக சாடும் அதிமுக, நாதக
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக இன்று சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்திருந்தது. அதில், சென்னையில் S.I.R நடைமுறைப்படுத்தப்படும் விதம் பற்றி அதிமுக, பா.ஜ.கவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

கூட்டத்தை முடித்துவிட்டு வெளியில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'இது காலங்கடந்த கூட்டம். இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவதில் தெளிவில்லை. தகவல்களை அப்லோட் செய்யும் சர்வர் சரியில்லை எனக் கூறியிருக்கிறோம்.
இறந்தோர் மற்றும் இடப்பெயர்வு சம்பந்தப்பட்ட பார்ம் 58, பார்ம் 59 க்களை இப்போதுதான் கொடுக்கின்றனர்.
எல்லா மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்குமே கடந்த வாரமே இந்த பார்ம் சென்றுவிட்டது. ஆனால், சென்னை மாவட்டத்தில் மட்டும் ஆணையர் இப்போதுதான் பார்மை கொடுக்கிறார்.
சரி, இந்த பார்மை யாரிடம் நிரப்பிக் கொடுப்பது? BLO க்கள் இதை வாங்குவதில்லை. BLO க்களும் இந்த பார்மை வாங்கச் சொல்லி அறிவுறுத்த கேட்டிருக்கிறோம்.
பார்மில் புகைப்படம் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் வாக்காளர்களின் விருப்பம். ஆனால், கட்டாயம் புகைப்படம் கேட்கிறார்கள்.

பல இடங்களில் BLO க்கள் திமுக டேபிளில் உட்காந்து வேலை செய்கிறார்கள். அதைப் பற்றி புகார் கொடுத்தும் பலனில்லை.
அடுக்குமாடி குடியிருப்புகளில் பார்ம்களை கொடுப்பதில்லை. கீழேயே போட்டுவிட்டு வந்துவிடுகின்றனர்.
கல்வித்தகுதியே இல்லாதவர்களை BLO க்களாக நியமித்திருக்கிறார்கள். BLO க்களின் பெயர் பட்டியலையும் அவர்களின் கல்வித்தகுதியையும் வழங்கச் சொல்லிக் கேட்டிருக்கிறோம்.
புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான பார்ம் எங்கே என்றால் முழிக்கிறார்கள்.
ஆளுங்கட்சிக்கு மட்டுமே முறையான தகவல்களைக் கொடுக்கிறார்கள்.' என்றார்.
பா.ஜ.க சார்பில் கலந்துகொண்ட கராத்தே தியாகராஜன் பேசுகையில், 'பாஜகவின் BLA2 க்களை இன்னும் அங்கீகரிக்கவில்லை.
விண்ணப்பப் படிவத்தில் முதல் பத்தியை மட்டும் நிரப்பினால் போதும். அதன்பிறகு, தொகுதியின் தேர்தல் அலுவலர் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவார். அதன்பிறகு அந்த 13 ஆவணங்களின் எதோ ஒன்றைக் கொடுத்தால் வாக்கு கிடைத்துவிடும். இதைத்தான் தேர்தல் அலுவலரும் கூறுகிறார்.

கொசு மருந்து அடிப்பவர்களையும் சத்துணவு ஊழியர்களையும் BLO க்களாக நியமித்திருக்கிறார்கள். அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக முதல்வர் கூறுகிறார். ஆனால், அப்படியில்லை.வாக்காளர் உதவி மையங்களை இன்னும் நீட்டிக்க கேட்டிருக்கிறோம்.' என்றார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சங்கர் பேசுகையில், 'அதிகாரிகள் சொல்லும் தகவல்கள் கீழே இருக்கும் BLO க்களுக்கு சென்று சேரவில்லை.
BLO க்கள் அவர்களே தங்களுக்கு தாங்களாக விதிகளை வகுத்துக் கொள்கிறார்கள்.
சில இடங்களில் ஆதார் எண் கட்டாயம் என்கிறார்கள். மேலும், சில இடங்களில் ஆதார், ரேஷன் கார்ட் ஜெராக்ஸ் எல்லாம் கேட்கிறார்கள். BLO க்களுடன் தேர்தல் அலுவலரின் அங்கீகாரம் பெறாத நபர்களெல்லாம் செல்கிறார்கள். இது BLO க்களுக்கு கூடுதல் அச்சத்தைக் கொடுக்கிறது. இந்த நடைமுறை குறுகிய காலத்தில் நடத்தப்படுவது பெரும் குழப்பத்தைக் கொடுக்கிறது.

68000 BLO க்கள் தகவல்களை வெப்சைட்டில் அப்லோட் செய்வதால்தான் வெப்சைட் டவுண் ஆவதாகக் கூறுகின்றனர். அதைக்கூட இவர்கள் சரியாக ஏற்பாடு செய்யவில்லை.
சென்னையில் இதுவரை 70% படிவங்கள்கூட கொடுக்கவில்லை. 10% பார்ம் கூட திரும்பப்பெறவில்லை என்கிறார்கள். எனில், எப்படி டிசம்பர் 4 க்குள் இந்தப் பணிகளை முடிப்பார்கள்?' என்றார்.














