திமுக - காங்கிரஸ் கூட்டணி சலசலப்பு; திருமாவளவனின் கருத்து என்ன?!
Taapsee Pannu: ``தினமும் 80 பாலியல் குற்றங்கள்... நாம் பழகிவிட்டோம்" - நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!
பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவி, நீட் தேர்வுக்காக பாட்னாவில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.
கடந்த ஜனவரி 6-ம் தேதி அவர் தனது அறையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி 5 நாள்களுக்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை,``மாணவி அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது." எனக் கூறியது. ஆனால், குடும்பத்தினர் இதனை மறுத்தனர். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை மறைக்க முயற்சி நடப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
இந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவியின் உடைகளில் மனித விந்தணு இருப்பது தடயவியல் அறிக்கையில் கண்டறியப்பட்டது. மேலும், உடற்கூறாய்வு அறிக்கையிலும் பாலியல் வன்கொடுமைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மாணவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதுகூட பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவரம் மருத்துவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது போன்ற சந்தேகங்கள், காவல்துறை யாரையோ காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
எனவே, மாணவியின் பெற்றோரின் அதிருப்தியாலும், மக்களின் போராட்டத்தாலும் பீகார் மாநிலத்தின் நிதிஷ் குமார் அரசு இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியிருக்கிறது.
இந்த நிலையில், 'அஸி' (Assi) திரைப்பட விளம்பரப் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகை டாப்ஸி பண்ணு, இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் ஆவேசமாகப் பேசியுள்ளார். ``இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் அன்றைய தினமே இது போன்ற 79 சம்பவங்கள் நடந்திருக்கலாம். சராசரியாக 80 சம்பவங்கள் நாட்டில் நடக்கின்றன.
இதைவிட அதிகமாகவும் இருக்கலாம். இது போன்ற வழக்குகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டோம். இது மிகவும் வருத்தமளிக்கிறது. இது போன்ற சம்பவங்கள் சாதாரணமாக நடப்பவை என்று கருதும் அளவுக்கு நாம் பழகிவிட்டோம் என்பதுதான் எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது" எனத் தெரிவித்தார்.







.jpeg)










