குழம்பிய குட்டையாய் திமுக கூட்டணி; `கை' கொடுக்குமா கமலின் முயற்சி?!
திடீரென வீலிங் செய்த இளைஞர்; நிலைதடுமாறிய பின்னால் அமர்ந்திருந்த பெண்.. விபரீதத்தில் முடிந்த சாகசம்!
மும்பையின் பிரதான சாலையில் வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை இரு சக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு, மிதமான வேகத்தில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். இதனால் பின்னால் இருந்த பெண்ணும் எந்தவித முன்னெச்சரிகையும் இல்லாமல் இருந்தார்.
திடீரென இரு சக்கர வாகனத்தை ஓட்டிய வாலிபர், இரு சக்கர வாகனத்தின் வேகத்தைக் கூட்டி, முன் சக்கரத்தை மேல் நோக்கித் தூக்கினார்.

இதனைச் சற்றும் எதிர்பாராத பின்னால் இருந்த பெண்ணின் கைபிடி நழுவியது. பின்னால் உள்ள இருக்கையின் நீளம் குறைவாக இருந்தது. பின்னால் பெரும்பகுதி டயர்தான் தெரிந்தது. வாலிபர் திடீரென வேகத்தைக் கூட்டி முன் பக்கச் சக்கரத்தைத் தூக்கியதால், பின்னால் இருந்த பெண் அதிர்ச்சியில் கையை நழுவ விட்டார். ஆனாலும் அந்த வாலிபரின் இடுப்பைப் பிடித்துக்கொண்டார். அப்பெண் இருக்கையில் இருந்து பின்நோக்கிச் சென்று டயரில் போய் அமர்ந்தார். அவரை டயர் உள்நோக்கி இழுத்தது.
இதனால் வண்டியின் வேகம் குறைந்தது. ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்த வாலிபர், வாகனத்தை நிறுத்தி பின் பக்க டயரில் சிக்கிக்கொண்ட பெண்ணை மீட்டார். இந்தச் சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. அந்த வீடியோ வைரலாகி இருக்கிறது. அதனைப் பார்த்த பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அப்பெண்ணின் கால் மற்றும் கை அந்த வாலிபரைச் சற்று பிடித்திருந்தது. பின்னோக்கிச் சென்ற பெண் கீழே விழுந்திருதால் பின்னால் இருந்து வரும் மற்ற வாகனம் அப்பெண்ணின் மீது ஏறி இருக்கும். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருவரும் ஹெல்மெட்டும் அணியவில்லை. ஆனால் இச்சம்பவத்தால் அப்பெண்ணின் இடிப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரை அந்த வாலிபர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஆபத்து விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தை இயக்கிய அந்த வாலிபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் போலீஸுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


















