`நீ உயிரோட இருந்தா பல குடும்பத்தை சீரழிச்சிடுவ!’ - மனைவியின் காதலனை ஸ்கெட்ச் போட...
Twisha Sharma case: `நீதிபதி குடும்பம் என்பதால் பாரபட்சமா?' - வழக்கை கையில் எடுத்தது உச்ச நீதிமன்றம்
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது முன்னாள் நடிகை த்விஷா ஷர்மாவின் மரணம். மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில், தனது கணவர் வீட்டில் கடந்த மே 12-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார் த்விஷா.
இந்த வழக்கில் மாமியார் முன்னாள் மாவட்ட நீதிபதி என்பதால், விசாரணை ஒருதலைபட்சமாக நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், இந்த வழக்கில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்புமுனையாக, உச்ச நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, அதிரடியான பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம் பஞ்சோலி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, "இந்த வழக்கின் சில நடவடிக்கைகள் எங்களுக்கு வலியைத் தருகின்றன" என்று வேதனையுடன் குறிப்பிட்ட நீதிபதிகள், த்விஷாவின் பெற்றோர் மற்றும் அவரது கணவர் குடும்பத்தினர் என இரு தரப்பினரும் தேவையின்றி ஊடகங்களிடம் பேசி வருவதாகக் கண்டனம் தெரிவித்தனர்.
"விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, இரு குடும்பத்தினரும் ஊடகங்களில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். சட்டப்படியும், நடைமுறைப்படியும் விஷயங்கள் நகரட்டும். இது தேவையற்ற தாக்கங்களையும், விசாரணை குறித்த முன்கூட்டிய முடிவுகளையும் தவிர்க்கும்" என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இந்த வழக்கில் மாமியாரான கிரிபாலா சிங், முன்னாள் மாவட்ட நீதிபதி என்பதுதான் சர்ச்சையின் மையப்புள்ளி. இதன் காரணமாகவே வழக்கில் பாரபட்சம் காட்டப்படுவதாக த்விஷாவின் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது. இதுகுறித்து பேசிய நீதிபதிகள், "மாமியார் ஒரு முன்னாள் மாவட்ட நீதிபதி என்பதற்காக, நீதித்துறையே இந்த விசாரணையைத் தடம் புரட்டுகிறது என்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இந்த கருத்தாக்கத்தை நாங்கள் எதிர்க்கிறோம்" என்று காட்டமாகத் தெரிவித்தனர். இதையடுத்து, கிரிபாலா சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இனி அவர் ஊடகங்களிடம் பேசமாட்டார் என நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
சிபிஐ வசம் சென்ற வழக்கு!
இந்த வழக்கை "உணர்ச்சிப்பூர்வமானது" மற்றும் "துரதிர்ஷ்டவசமான சம்பவம்" என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கில் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை மிக அவசியம் என்பதை வலியுறுத்தியது. இதை உறுதிசெய்யும் விதமாக, இந்த வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வரதட்சணைக் கொடுமையா? போதைப்பொருள் பழக்கமா? - இருதரப்பும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த த்விஷா ஷர்மாவும் (33), போபாலைச் சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான சில மாதங்களிலேயே, மே 12 அன்று த்விஷா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
ஆனால், தனது மகளை வரதட்சணை கேட்டு கணவர் சமர்த்தும், மாமியார் கிரிபாலா சிங்கும் கொடுமைப்படுத்தியதாகவும், தற்கொலைக்குத் தூண்டியதாகவும் த்விஷாவின் பெற்றோர் குற்றம்சாட்டினர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சிங் குடும்பத்தினர் அடியோடு மறுத்துள்ளனர். த்விஷா மன அழுத்தத்தில் இருந்ததாகவும், போதைப்பொருளுக்கு அடிமையாகி இருந்ததாகவும் அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
வழக்கின் பின்னணி என்ன?
த்விஷாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது கணவர் சமர்த் சிங் தலைமறைவானார். பின்னர், ஜபல்பூர் நீதிமன்றத்தில் சரணடைய வந்தபோது கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். முன்னதாக, த்விஷாவின் உடல் போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தபோது, பிரேதப் பரிசோதனையில் தங்களுக்கு திருப்தியில்லை என்று கூறி, உடலை வாங்க அவரது பெற்றோர் மறுத்தனர். இரண்டாவது முறையாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு போபாலில் பிரேதப் பரிசோதனை செய்த பிறகே உடலைப் பெற்றுக்கொண்டனர். இந்தச் சூழலில்தான், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
















