அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாக...
`எனது தாத்தா சொன்னார்' - இந்திய அணிக்கு விளையாட குடியுரிமையை சரண்டர் செய்த ஆஸி., கால்பந்து வீரர்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் அடிப்படையில் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஆவார். வில்லியம்ஸ் குடும்பத்தினர் அவரது தாத்தா காலத்திலேயே இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் சென்று செட்டில் ஆகிவிட்டனர். தற்போது வில்லியன்ஸ் பெங்களூரு கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார்.
வில்லியம்ஸ் தாத்தா லிங்கன் எரிக் க்ரோஸ்டேட் இந்தியாவில் 1956களில் டாடா, ரயில்வே கால்பந்து அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்.

இதையடுத்து தானும் இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்பது வில்லியம்ஸின் நீண்ட நாள் கனவாகும். தனது தாத்தாவை பின்பற்றி வில்லியம்ஸும் சிறு வயதில் இருந்தே கால்பந்து விளையாட்டில் கவனம் செலுத்தி வந்தார். ஆஸ்திரேலியாவில் அதிகமான போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஆஸ்திரேலிய தேசிய அணியில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் விளையாடி இருக்கிறார்.
அதோடு இங்கிலாந்தில் பல கிளப்களில் விளையாடியுள்ளார். ஆனாலும் தனது தாத்தா விளையாடிய இந்தியாவில் தானும் கால்பந்து விளையாட வேண்டும் என்பது வில்லியம்ஸின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது. அதற்காகவே 2023-ம் ஆண்டு இந்தியா வந்து பெங்களூரு கால்பந்து அணியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இது குறித்து ரியான் வில்லியம்ஸ் கூறுகையில், ''எனது தாத்தா எனது சகோதரன் அரினை இந்தியாவில் விளையாடச் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. என்னிடமும் இந்தியாவில் சென்று விளையாடும் படி சொன்னார். ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டை சரண்டர் செய்துவிட்டு இந்தியா பாஸ்போர்ட் எடுப்பது கடினமான ஒரு நடைமுறை என்றாலும், நானும், தனது குடும்பத்தினரும் துணிந்து அது போன்ற ஒரு முடிவை எடுத்தோம். என் அம்மா இங்கே(இந்தியா)தான் பிறந்தார், என் தாத்தா பாட்டி, என் கொள்ளு தாத்தா பாட்டியும் கூட இந்தியாவில்தான் பிறந்தார்கள். இந்தியாவில் பாஸ்போர்ட் வாங்க ஒரு ஆண்டாக முயற்சி செய்து கொண்டிருந்தேன். அடிக்கடி அரசு அலுவலகத்திற்கு சென்று வந்தேன்.
இறுதியாக போராடி இந்திய பாஸ்போர்ட் எனது கையில் கிடைத்தபோது எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. தேசிய அணிக்காக அறிமுகமாவது எந்த ஒரு தொழில்முறை கால்பந்து வீரருக்கும் மிகவும் பெருமையான தருணம். இந்த தருணத்திற்காக தான் நான் இவ்வளவு காலமாகக் காத்திருந்தேன். நான் இந்திய ஜெர்சியை அணியும்போது, நாட்டிற்காக, அணிக்காக, ரசிகர்களுக்காக எல்லாவற்றையும் தருவேன். அந்த உணர்வை வார்த்தைகளில் சொல்வது மிகவும் கடினம். மகிழ்ச்சியாகவும் அது மிகவும் உணர்ச்சி பூர்வமாகவும் இருக்கும்.இப்போதுதான் தாய்நாட்டிற்காக விளையாடுவது போன்ற ஒரு உணர்வு இருக்கிறது''என்று தெரிவித்தார்.

இந்திய பாஸ்போர்ட் எடுத்திருப்பதால் இந்த மாத இறுதியில் பங்களாதேஷிற்கு எதிரான போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சேர வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு 2012ம் ஆண்டு ஜப்பான் கால் பந்து வீரர் இசுமி அராட்டா தனது ஜப்பான் குடியுரிமையை சரண்டர் செய்துவிட்டு இந்திய குடியுரிமை பெற்று இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு 13 ஆண்டுகள் கழித்து இப்போது அதே கால்பந்து விளையாட்டுக்காக ஆஸ்திரேலிய வீரர் வில்லியம்ஸ் தனது குடியுரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு இந்திய குடியுரிமையை வாங்கி இருக்கிறார். வில்லியன்சின் இரண்டு சகோதரர்களும் கால்பந்து வீரர்கள் ஆவர். அவர்கள் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகின்றனர்.















