'சொந்த வீடு வேண்டாம்; வாடகை வீடே போதும்.!' - இன்றைய இளைஞர்கள் இப்படி யோசிக்க என்...
எழுத்தாளர் சங்க தேர்தல் `அப்ப பாக்யராஜ் சார் அப்படி சொன்னது எங்களுக்கு மனக்காயமாகிடுச்சு'- ரவிமரியா
தமிழ்த் திரையுலக ரைட்டர்களின் தனித்துவமான சங்கம் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை சொல்லலாம். உதவி இயக்குநர்களின் கதை திருட்டு பிரச்னை எழும்போதெல்லாம் அவர்கள் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தைத்தான் நம்பிக்கையுடன் நாடுவார்கள். பெப்சியின் கீழ் இயங்கும் இச்சங்கத்தின் தலைவராக இயக்குநர் கே.பாக்யராஜ் செயல்பட்டு வந்தார். அவரது பதவிக்காலம் நிறைவடையும் தருவாயில் தான் அவர் காலமானார். இதற்கு முன் மூன்று முறை தலைவராக இருந்த பாக்யராஜை மீண்டும் தலைவராக தேர்வு செய்யும் பேச்சு இருந்து வந்தது. இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 2026-29க்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 19ம் தேதி சென்னை வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடக்கிறது. இம்முறை இரு அணிகள் மோதுகின்றன.

'நம்ம கே.பாக்யராஜ் அணி'யின் தலைவராக சேரன், பொதுச்செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளராக ஆர்.சுந்தர்ராஜன், துணைத் தலைவர்களாக சமுத்திரக்கனி, சினேகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதைப் போல, 'திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணி'யின் சார்பில் தலைவராக வி.சி.குகநாதன், பொதுச்செயலாளராக மனோஜ்குமார், பொருளாராக லியாகத் அலிகான், துணைத் தலைவர்களாக 'யார்' கண்ணன், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். சென்ற முறை சங்கத்தின் துணை தலைவராக இருந்த ரவிமரியா, இப்போது இணை செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். தேர்தல் குறித்து ரவிமரியாவிடம் பேசினோம்.

''கடந்த தேர்தலின் போது எஸ்.ஏ.சந்திரசேகர் அணி, கே.பாக்யராஜ் அணினு ரெண்டு அணிகளாக போட்டியிட்டாங்க. அதுல நான் எஸ்.ஏ.சி.சார் அணியில இருந்தேன். தேர்தல்ல பாக்யராஜ் சார் தலைமையிலான அணியில் 11 பேர் ஜெயிச்சாங்க. ஏஸ்.ஏ.சி.சார் அணியில் 10 பேர் ஜெயிச்சாங்க. 21 பேர் கொண்ட குழுவாக நிர்வாகக்குழு அமைஞ்சது. முதல் ஆறு மாசத்துல நிறைய இடர்பாடுகள், புரிதல்கள் இல்லாமல் தான் இருந்துச்சு. அப்புறம் புரிதல் ஏற்பட்டு சீரானது. நிர்வாகம் தொடர்பான வாக்குவாதங்கள் அப்பப்ப நடக்கும். மத்தபடி தனிப்பட்ட தாக்குதல்கள் இருந்ததில்லை. கடைசி செயற்குழுவிற்கு முன்னர், பாக்யராஜ் சார் கூப்பிட்டு, 'நாம ரெண்டு அணிகளாக ஏன் நிற்கணும்.
ஓரணியாக நிற்போமே'னு சொன்னார். அதை வலியுறுத்தி பொதுக்குழுவின் போது பாக்யராஜ் சாரோடு ஒற்றுமையாகத்தான் நின்னோம்னு சொன்னோம். ஆனா அவர், 'ஒற்றுமையாகத்தான் நின்னோம். ஆனா, இப்பவே ரெண்டு அணியா இல்லை. மூணு, நாலு அணியாக இருக்குது. முணு, நாலு பேர் துணிஞ்சு செயல்படுறாங்க'னு சொன்னார். அவர் அப்படி சொன்னதும் அவர் அணியில் உள்ளவர்கள் சிலருக்கும், எங்களுக்கும் மனக்காயம் ஆகிடுச்சு. ஏன்னா, நாங்க பாக்யராஜ் அணியை தொடரலாம்னு சொல்லியும் அவர் நாலு அணியா இருக்காங்கனு சொல்றாரேனு சின்ன வருத்தமும் இருந்துச்சு.

அப்புறம், பாக்யராஜ் சார் தனியா டீம் அமைப்பார். அதில் இணையலாம்னு இருந்தோம். அதற்குள் அவரது மறைவு பேரதிர்ச்சியாகிடுச்சு. நாங்க முன்பு எஸ்.ஏ.சி. அணியில் இருந்ததால அவங்க சேரன் சார் தலைமையில் ஒரு அணியை அமைச்சாங்க. சென்ற முறை நான் துணை தலைவராக இருந்ததால, இந்த முறை என்னை தலைவராக போட்டியிட சிலர் சொன்னாங்க. கௌரவ தலைவராக வி.சி.குகநாதன் சாரையும், மற்ற பொறுப்புகள்ல சீனியர்களை தேர்வு செய்ய நினைச்சாங்க. கௌரவத் தலைவர் ரொம்ப வலுவான தலைவர் என்பதால், அவரையை தலைவராக போட்டியிட வச்சிட்டோம். நான் இணை செயலாளர் பதவிக்கு போட்டியிடுறேன். சென்ற முறை பாக்யராஜ் அணியில் இருந்து பெரும்பாலோனோர் இப்ப எங்க அணியில் தான் இருக்காங்க.

திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணியின் சார்பில் எங்களது வாக்குறுதியாக பலவற்றை கொடுத்துள்ளோம். கதாசிரியர்களுக்கு சரியான விகிதத்துல கதைக்கான உரிமையை வாங்கித் தரணும். பிறமொழி உரிமைகளும் கிடைக்கச் செய்யணும். இப்போது செயல்பட்டு வரும் சொந்த கட்டடம் சிறிய அளவுல உள்ளது. அதை பெரிய கட்டடமாக, நவீனத்துடன் அமைய அரசின் தயவுல வாங்கணும். 60 வயதுக்கு மேற்பட்ட எழுத்தாளர்களுக்கு பென்சன், மருத்துவ காப்பீடு, கதாசிரியர்களுக்கான காப்பீடு கிடைக்க செய்யணும். இப்படி பயனுள்ள வாக்குறுதிகளை அளிக்கிறோம்.'' என்கிறார் ரவிமரியா.

இந்நிலையில் சேரன் தலைமையிலான அணியினர் சிலரிடம் பேசினோம். ''பாக்யராஜ் சார் இருக்கும் போது தேர்தலில் அவரோட அணியாக நிற்கணும்னு ரெடியானவங்கள்ல பெரும்பாலோனோர் தான் இப்ப நம்ம கே.பாக்யராஜ் அணியில் இருக்காங்க. அவருக்கு எதிராக களமிறங்கணும்னு நினைக்கிறவங்க தான் இப்ப திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணி என்று அவர் பெயரில் அணி அமைச்சு போட்டிடுறது கேள்விக்குரியாகவும், நகைப்புக்கும் உள்ளாகுது. மற்றபடி கோரிக்கைகள், வாக்குறுதிகள் திட்டமிட்டிருக்கோம். எங்களது வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தின் போது அதில் அறிவிப்போம். மற்றபடி தலைவர் அதிகாரபூர்வமாக சொல்வது தான் சரியாக இருக்கும்'' என்கின்றனர்.


















