Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
'கோட்டையில் ஓட்டை போட திமுக சம்மட்டியுடன் தயாராக உள்ளது!' - அதிமுகவினருக்கு எஸ்.பி. வேலுமணி வார்னிங்
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வியூகங்களுடன் அனல் பறக்க தொடங்கிவிட்டன. கொங்கு மண்டலத்தை குறிவைத்து திமுக காய் நகர்த்தி வருகிறது. அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக கொங்கு மண்டல பொறுப்பாளர்களாக உள்ளனர்.

திமுக வெற்றிக்காக செந்தில் பாலாஜி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அண்மையில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடைபெற்றது. விரைவில் திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு அரசு திட்டங்களை நிறைவேற்ற திமுக திட்டமிட்டுள்ளது. பல முக்கிய அறிவுப்புகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுத்து கொங்கு மண்டலத்தில் தங்கள் செல்வாக்கை தக்கவைப்பதற்கு அதிமுக திட்டமிட்டுள்ளது.

பவர் சென்டர்
கொங்கு மண்டல அதிமுகவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முக்கிய பவர் சென்டர். கோவையில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய காரணமாக உள்ளார். இந்நிலையில் கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, “அதிமுக கூட்டணியில் இனி ஒவ்வொரு கட்சியாக வருவார்கள். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும். ஒரு தோல்வியை சந்தித்தால் அடுத்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.
ஒரு தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த தேர்தலில் திமுக தோற்று விடும். இது வரலாறு. அதேநேரத்தில் நாம் திமுகவை குறைத்து மதிப்பிட கூடாது. கோட்டையில் ஓட்டை போட முடியாது என்று சொல்வார்கள். ஆனால் சம்மட்டியுடன் தயாராக இருக்கிறார்கள்.
மாயை
கொலுசு மற்றும் ரூ.1,000 பணம் கொடுத்து ஏமாற்றுவார்கள். பூத்திற்கு சராசரியாக 50 ஓட்டுகள் மாற்றினால் தொகுதிக்கு 35,000 ஓட்டுகள் வரும். தற்போது புதிது புதிதாக ஏதேதோ கட்சிகள் வந்துவிட்டன. இளைஞர்கள் அங்கு இருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் மாயை.

யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். பூத் வாரியாக கோயில், ஜமாத் கமிட்டி, குடியிருப்போர் சங்கங்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து, இறங்கி வேலை பார்க்க வேண்டும். திமுக வேலை செய்யாதது போல இருக்கும். ஆனால் இறங்கி வேலை பார்ப்பார்கள்.
பெண்கள் மற்றும் இளைஞர்கள் துண்டு பிரசுரங்களுடன் வீடு வீடாக பிரசாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 70 தெருமுனை கூட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிரியை எந்த காலத்திலும் முந்த விடக்கூடாது. கோவைக்கு அத்தனை திட்டங்களையும் அதிமுக தான் நிறைவேற்றியுள்ளோம்.

திமுக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெற்று எடப்பாடியை முதல்வராக அமர வைக்க வேண்டும். அதுதான் நம் லட்சியம்” என்றார்.














