'நமக்காக பேச யாருமில்லை' - விரக்தியடைந்த விசிக நிர்வாகிகள்; இழுபறியில் பேச்சுவார...
தென்காசி: திருமணத்திற்கு மறுத்த காதலி; பள்ளியின் வாசலில் வைத்து கத்திரிக்கோலால் குத்திய காதலன் கைது
தென்காசியைச் சேர்ந்தவர் சொர்ணம். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது கடையநல்லூர் அருகேயுள்ள ஆய்குடியில் ஒரு தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். நெல்லை, பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், அதே பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார்.

இருவரும் உறவினர்கள் என்பதால் நெருங்கிப் பேசி வந்துள்ளனர். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு சுரேஷின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுரேஷின் குடும்பத்தினர் சொர்ணத்தின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளனர். ஆனால், இவர்களின் உறவு முறையில் வேறுபாடு இருந்ததால் சொர்ணத்தின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை.
இதனையடுத்து சொர்ணமும் சுரேஷுடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம். பலமுறை முயன்றும் சொர்ணம், சுரேஷிடம் பேச மறுத்துள்ளாராம். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ், சொர்ணம் பணிபுரியும் பள்ளிக்கூடத்திற்குச் சென்று, “உன்னிடம் தனியாகப் பேச வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அதற்கும் சொர்ணம் மறுக்கவே, பள்ளிக்கூட வாசலில் வைத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து சொர்ணத்தின் கழுத்துப்பகுதியில் ஓங்கி குத்தியுள்ளார்.

சொர்ணம் சுதாரிப்பதற்குள் அவரது முதுகு, கை, கால் என 5 இடங்களில் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதனைப் பார்த்த மாணவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.
சக ஆசிரியர்கள், ஊழியர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து இலத்தூர் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


















