அமைச்சர் மன்னிப்பு: ``இனி இதுபோல நடக்கக் கூடாது" - மதுரையில் எம்.பி சு.வெங்கடேசன...
பாண்டி மெரினா பின்னால் குவியும் குப்பைகள்... மாங்குரோவ் காடுகளை நோக்கி நகரும் கழிவுகள்!
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் பாண்டி மெரினாவும் ஒன்று.
ஆனால், இந்தப் பகுதியின் பின்புறம் சென்றால் நிலைமை சற்று மாறுபட்டதாக இருக்கிறது. உப்பளம் பகுதியில் இருந்து வரும் குப்பைகள் நீர்நிலையை ஒட்டி தேங்கி வருவதுடன், நாளுக்கு நாள் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ள பகுதியை நோக்கியும் பரவி வருகின்றன.
பாண்டி மெரினாவின் பின்புறத்தில் உள்ள நீர்நிலைப் பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், தெர்மாகோல் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. சில இடங்களில் குப்பைகள் நீருடன் சேர்ந்து மிதப்பதையும் பார்க்க முடிகிறது.

உப்பளம் பகுதியில் இருந்து வரும் கழிவுகள்தான் இங்கு வந்து சேர்வதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வரும் குப்பைகள் நீரின் ஓட்டத்துடன் மாங்குரோவ் காடுகள் இருக்கும் பகுதிக்கும் சென்று கொண்டிருக்கின்றன. இதனால் மாங்குரோவ் மரங்களுக்கு இடையிலும் குப்பைகள் சிக்கிக் கிடக்கின்றன.
மாங்குரோவ் காடுகள் கடலோரப் பகுதிகளின் இயற்கைச் சூழலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அப்படிப்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் தொடர்ந்து சேர்வது அந்தச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
குப்பைகள் மேலும் பரவாமல் இருக்க நீர்நிலையில் தடுப்பு அமைக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது. ஆனால், அந்தத் தடுப்பில் சிக்கிக் கொள்ளும் குப்பைகள் தொடர்ந்து அகற்றப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுகிறது.
குப்பைகள் சேர்ந்து கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் அவை தடுப்பைக் கடந்து மாங்குரோவ் பகுதிகளுக்குச் செல்லும் நிலை ஏற்படலாம்.
இதில் இன்னொரு கவலைக்குரிய விஷயம், இந்தப் பகுதி ஒரு சுற்றுலா தலத்தின் அருகில் இருப்பதுதான். புதுச்சேரிக்கு வரும் மக்கள் கடற்கரை மற்றும் மாங்குரோவ் பகுதிகளின் இயற்கை அழகை ரசிக்க வரும் நிலையில், அதன் பின்னாலேயே குப்பைகள் குவிந்து கிடப்பது அந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் நிலையை கேள்விக்குள்ளாக்குகிறது.
கடற்கரையை மட்டும் சுத்தமாக வைத்திருப்பது போதாது. கடற்கரையைச் சுற்றியுள்ள நீர்நிலைகள், கால்வாய்கள் மற்றும் மாங்குரோவ் பகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக, குப்பைகள் இங்கு வந்து சேர்ந்த பிறகு அகற்றுவதைவிட, அவை நீர்நிலைக்குள் வருவதையே தடுப்பது முக்கியம்.

உப்பளம் பகுதியில் இருந்து வரும் குப்பைகள் நீர்நிலையை அடைவதற்கு முன்பே கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதேபோல், ஏற்கெனவே தேங்கியுள்ள குப்பைகளையும் அகற்றி, அந்தப் பகுதியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
சுற்றுலாப் பயணிகள் ரசிக்க வேண்டிய இடத்தின் பின்னாலேயே குப்பைகள் குவிந்து கிடப்பது மாற வேண்டும். மாங்குரோவ் காடுகளுக்குள் மேலும் குப்பைகள் செல்லாமல் தடுக்கவும், இந்தப் பகுதிக்கு நிரந்தரத் தீர்வு காணவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.








.jpeg)











