பழனி முருகன் கோயிலில் ஒலித்த 'உங்க விஜய்' பாடல்; இளைஞர் அட்ராசிட்டி - போலீஸில் ப...
முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்
மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் போலீஸ்காரராக இருப்பவர் பந்து பிசே (49). இவர் தான் விரும்பும் பெண்ணை தனது நண்பரும் விரும்பியதால் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து தனது நண்பரை கொலை செய்து கிணற்றில் தூக்கிப்போட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா அருகில் உள்ள சுகேத் என்ற கிராமத்தில் உள்ள தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் பாதி எரிந்த நிலையில் ஒரு உடல் கிடந்ததை அதன் உரிமையாளர் பார்த்தார். இது குறித்து அவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். பாதி எரிந்த நிலையில் இருந்த அந்த உடலில் கால்கள் கட்டப்பட்டு இருந்தது.

இதனால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று போலீஸார் கருதினர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்ட கார் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். புனே அருகில் உள்ள கேட்-சிவாபூர் டோல்கேட்டில் ஆய்வு செய்யப்பட்டதில் புனேயில் பதிவு செய்யப்பட்ட ஒரு காரின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அக்காரின் உரிமையாளர் யார் என்று ஆய்வு செய்தபோது அது பந்துவிற்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.
முக்கோண காதல்
பந்துவை பிடித்துச்சென்று விசாரித்த போது ஆரம்பத்தில் மழுப்பலாக பதிலளித்தார். ஆனால் அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் சோம்நாத் என்றும், அவர் மும்பை அருகில் உள்ள கலம்பொலியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. பந்து காதலிக்கும் பெண்ணை சோம்நாத்தும் காதலித்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் மோதல் இருந்து வந்துள்ளது. பந்து இப்பிரச்னை குறித்து பேச சோம்நாத்தை அழைத்தார். சோம்நாத் வந்தபோது அவரை காருக்குள் அழைத்தனர்.
காரில் ஏற்கனவே அவரது நண்பர்கள் விஜய், கிரன், ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து சோம்நாத்தை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். உடலை மறைப்பதற்காக அவர்கள் காரிலேயே சதாராவிற்கு எடுத்து சென்றதாக பந்து போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். சோம்நாத்திற்கு இன்னும் திருமணமாகவில்லை. அவர் டாக்சி ஓட்டி வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.



















