பெங்களூரு: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி; நடுரோட்டில் சுட்டுக் கொலைசெய்த இள...
மும்பை தேர்தல்: `தாக்கரே சகோதரர்கள் வென்று விடுவார்கள்' - பாஜக-விடம் அதிக இடங்களை கேட்கும் ஷிண்டே
மும்பை மாநகராட்சிக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்தல் நடைபெறுகிறது. அதுவும் சிவசேனா உடைந்த பிறகு சந்திக்கும் முதல் தேர்தலாக இருப்பதால் மும்பையில் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் சோதனைக் களமாக இத்தேர்தல் அமைந்திருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே தங்களிடமிருந்து பா.ஜ.க துணையோடு சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை திருடிக்கொண்டதாக தொடர்ந்து உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டி வருகிறார்.
மும்பை மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றே தொடங்கிவிட்டது. ஆனால் ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இன்று உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் வார்டு பங்கீடு தொடர்பாக அறிவிப்பு வெளியிடுகின்றனர்.

அவர்கள் இருவர் இடையே ஒரு மித்த கருத்து எட்டப்பட்டுவிட்டது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்க்க கடைசி வரை உத்தவ் தாக்கரே மேற்கொண்ட முயற்சி பலனலிக்கவில்லை.
இதையடுத்து தாக்கரே சகோதரர்கள் மட்டும் தேர்தலில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் சேர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 145 முதல் 150 வார்டுகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 65 முதல் 70 வார்டுகளில் போட்டியிடும் என்று தெரிகிறது.
அதேசமயம் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே தங்களது கட்சிக்கு மொத்தமுள்ள 227 வார்டுகளில் 105 முதல் 113 வார்கள் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் 60 முதல் 70 வார்டுகள் கொடுக்க தயாராக இருப்பதாக பா.ஜ.க தெரிவித்து இருக்கிறது. தங்களிடம் 2017ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 60 கவுன்சிலர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி அவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை அவரது இல்லத்தில் ஏக்நாத் ஷிண்டே சந்தித்து இரண்டு மணி நேரம் இது குறித்து பேசினார். இப்பேச்சுவார்த்தையில் கடந்த தேர்தலில் மராத்தியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியில் மராத்தி பேசக்கூடிய 79 கவுன்சிலர்கள் சிவசேனாவில் இருந்து வெற்றி பெற்றதாகவும், அதில் தற்போது தங்களுடன் 54 பேர் இருப்பதாகவும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஷிண்டே தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனா(ஷிண்டே) 20 சதவீத வாக்குகள் பெற்றதாகவும், பா.ஜ.க 32.5 சதவீத வாக்குகள் பெற்றதாகவும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 23 சதவீத வாக்குகள் பெற்றதாகவும், ராஜ் தாக்கரேயின் நவநிர்மாண் சேனா 8.5 சதவீத வாக்குகள் பெற்றதாகவும், தாக்கரே சகோதரர்கள் இணைந்திருப்பதால் அவர்களது வாக்கு 32 சதவீதமாக அதிகரித்துவிடும் என்றும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மராத்தியவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தங்களது கட்சிக்கு போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லையெனில் அது பா.ஜ.க கூட்டணிக்கு பாதிப்பாக அமையும் என்று ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கையாக கூறி இருக்கிறார்.
மேலும் இஸ்லாமிய வாக்குகள் உத்தவ் தாக்கரே கட்சிக்கு செல்லும்பட்சத்தில் பா.ஜ.கவை விட தாக்கரே சகோதரர்கள் கூடுதல் வாக்குகளை பெற வாய்ப்பு இருப்பதாகவும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதே பிரச்னை தொடர்பாக ஏக்நாத் ஷிண்டேயை பா.ஜ.க தலைவர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து அதிகாலை 4 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர். மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் இருக்கும் மாநகராட்சிகளில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பதை உறுதி செய்தன.
அடுத்த இரண்டு நாட்களில் இரு கட்சிகளும் எத்தனை வார்டுகளில் போட்டியிடுவது என்பதை முடிவும் செய்வது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் நிர்வாகிகள் மட்டத்தில் இரண்டு நாள் பேசி எத்தனை தொகுதி என்பதை முடிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இறுதியாக கிடைத்த தகவலின் படி மும்பையில் 90 வார்டுகள் வரை சிவசேனா(ஷிண்டே)விற்கு கொடுக்க பா.ஜ.க முன் வந்துள்ளது. ஆனால் மேலும் 20 வார்டுகள் வேண்டும் என்று ஷிண்டே கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.














