TVK: '5 பாயின்ட்டுகள்... 47 கி.மீ., பயணம்!' - சென்னையில் விஜய்யின் பிரசார திட்டம...
வகுப்பறையில் மாணவியிடம் 'ஐ லவ் யூ' சொன்ன பேராசிரியருக்குச் செருப்படி; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
பெங்களூருவில் உள்ள நிலமங்களா பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் அப்துல். இவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது ஒரு மாணவியிடம் ஐ லவ் யூ என்று சொன்னார்.
இதனால் மாணவர்கள் அதிர்ச்சியுடன் பேராசிரியைப் பார்த்தனர். சம்பந்தப்பட்ட மாணவி பேராசிரியரின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து பேராசிரியர் வகுப்பறையை விட்டு வெளியில் செல்ல முயன்றார். அவரை மடக்கி மாணவி வாக்குவாதம் செய்தார். அப்போது மாணவியைப் பார்த்து, ''நீ என்னிடம் ஐ லவ் யூ சொல்லவில்லையா?'' என்று கேட்டார் பேராசிரியர்.

அதற்கு மாணவி அப்படி தான் எதுவும் சொல்லவில்லை என்று தெரிவித்தார். உடனே, ''உனக்கு என் மீது விருப்பம் இருக்கிறது. அதனைக் கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் என்னால் நிரூபித்துக்காட்ட முடியும்'' என்று தெரிவித்தார்.
அம்மாணவியும் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் காண்பிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் நிலைமை விபரீதமானதைத் தொடர்ந்து பேராசிரியர் வகுப்பறையை விட்டு வெளியில் சென்றார். அவர் வெளியில் சென்ற பிறகு இது குறித்து மாணவர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
மாணவர்கள் மீண்டும் பேராசிரியரை கல்லூரி வளாகத்தில் மடக்கி இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அந்நேரம் சம்பந்தப்பட்ட மாணவி தனது செருப்பை எடுத்து பேராசிரியரை அடித்தார். மற்ற மாணவர்களும் பேராசிரியரை விரட்டி விரட்டி அடித்தனர்.
இச்சம்பவத்தை மாணவர் ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி இருக்கிறது. இது தொடர்பாக யாருமே போலீஸில் புகார் கொடுக்கவில்லை. ஆனாலும் போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
புகாரின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். பேராசிரியர் மாணவியிடம் ஐ லவ் யூ சொல்லிவிட்டு அனைத்து மாணவர்களுக்கும் சாக்லேட் கொடுக்க முடிவு செய்து ஒரு பெட்டி முழுக்க சாக்லேட்டும் வாங்கி கொண்டு வந்திருந்தார்.




















