BB Tamil 9: ``உனக்கு மேனஸ் இல்லையா?'' - துஷாரிடம் மோதும் திவ்யா
``ஸ்டாலின் தலைமறைவாக இருந்தது உண்மைதான்; ஆனால்'' - களத்தில் இருந்த மூத்த பத்திரிகையாளர் விளக்கம்
தவெகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நேற்று மாமல்லபுரத்தில் நடந்திருந்தது. இதில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர், 'கலைஞர் கைது செய்யப்பட்ட போது அவரது மகன் ஸ்டாலின் தலைமறைவாக இருந்தார்.' எனப் பேசியிருந்தார்.
ஆதவ் அர்ஜூனாவின் இந்தப் பேச்சு விவாதமாகியிருக்கிறது.

ஸ்டாலின் தலைமறைவாகத்தான் இருந்தார் என்று ஒரு கூட்டமும் ஸ்டாலின் தலைமறைவெல்லாம் ஆகவில்லை என ஒரு கூட்டமும் வாதிட்டுக் கொண்டிருக்கிறது. இதில் உண்மை என்ன என்பதை அறிய அந்த 2001 காலக்கட்டத்தில் களத்தில் நிருபராக துடிப்பாக இயங்கிக் கொண்டிருந்த மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.
சம்பவம் குறித்து அவர் கூறியதாவது, 'தவெகவின் மேடையில் ஸ்டாலின் தலைமறைவாக இருந்தார் என ஆதவ் அர்ஜூனா பேசியது உண்மைதான். ஆனால், அதை மேலோட்டமாக பார்த்தால் நிதர்சனத்தை உணர முடியாது.
ஸ்டாலின் ஒன்றும் இவர்களைப் போல ஒரு மாதமாக தொடர்புகொள்ளவே முடியாத அளவுக்கு தலைமறைவாகவில்லை. அவர் பத்திரிகையாளர்களுடன் பேசிக்கொண்டுதான் இருந்தார்.
தனிப்பட்ட முறையில் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருந்தார். கட்சிக்காரர்களுடனும் தொடர்பில்தான் இருந்தார்.

அப்போது இருந்த சூழலையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். மேம்பால வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கில்தான் கலைஞரையும் ஸ்டாலினையும் ஜெயலலிதா கைது செய்ய நினைத்தார்.
கலைஞரை கைது செய்த பிறகுதான் ஸ்டாலினை கைது செய்ய விரைகிறார்கள். ஸ்டாலின் அப்போது ஊரில் இல்லை. ஒருவேளை ஸ்டாலின் சிக்கியிருந்தால், கலைஞரையும் ஸ்டாலினையும் காலி செய்து விட்டு திமுகவை காணாமல் ஆக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருந்தது.
இதையெல்லாம் உணர்ந்துதான் ஸ்டாலின் தலைமறைவாக இருந்தார்.
கனிமொழி அப்போது அரசியலில் இல்லையென்றாலும், கலைஞரை கைது செய்துவிட்டார்கள் என பத்திரிகையாளர்களுக்கு தகவலை பரப்பி கலைஞருடனே இருந்தார்.
உடல் பரிசோதனைகளை செய்து கலைஞரை சிறையில் வைக்க மாஜிஸ்திரேட் கூறிய போதும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் பாதி வழியிலேயே காத்திருந்தார்கள்.

அதிகாலை என்பதால் ஜெயலலிதாவிடமிருந்து அடுத்த உத்தரவு வரவில்லை. அந்த சமயத்தில்தான் கனிமொழி எதோ நடக்கப் போகிறது என்பதை அறிந்து கலைஞரை எச்சரிக்கிறார்.
உடனடியாக கலைஞர் வேனிலிருந்து கீழே இறங்கி வெளியில் அமர்ந்துவிடுவார். அந்த படங்களை எல்லா பத்திரிகைகளும் படம்பிடித்தன. கலைஞரின் கைது அரசியல் பழிவாங்கலுக்காக செய்யப்பட்டது. அதனால்தான் ஸ்டாலின் தலைமறைவாக இருந்தார். தவெகவினரை முழுவதுமாக முடங்கிவிடவில்லை.' என்றார்.
















