'அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா?'- திருவாபரண பாதை பாதுகா...
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் மார்கழி மாதப் பிறப்பையொட்டி சிறப்புப் பூஜை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாதப் பிறப்பு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றதை முன்னிட்டு, ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா மற்றும் மார்கழி மாத விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீஆண்டாள் மானிடப் பெண்ணாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தார். ஸ்ரீரங்கநாதருக்குப் பூமாலை சூட்டிய பின், திருப்பாவை பாடி அரங்கனை அடைந்தார். அரங்கனை அடைய 30 நாட்கள் மார்கழி மாதம் நோன்பிருந்து திருப்பாவை பாடிய ஆண்டாள் நோன்பு நோற்ற காலமான இந்த மார்கழி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

அதன் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு மார்கழி மாத முதல் நாள் பிறப்பையொட்டி ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக தங்கக் குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து 30 திருப்பாவைகளும் பொறிக்கப்பட்ட தங்க இழைகளால் நெய்யப்பட்ட புடவை ஸ்ரீஆண்டாளுக்குச் சாற்றப்பட்டது. திருமணமாகாத கன்னிப் பெண்கள் ஸ்ரீஆண்டாள் நோன்பு நோற்ற இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி ஸ்ரீஆண்டாளை தரிசனம் செய்தால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
இதனால் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் ஸ்ரீஆண்டாளுக்கு 30 நாட்களும் திருப்பாவைப் பாடல் பாடப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

இன்று மார்கழி மாதம் முதல் நாள் என்பதால் தங்கக் குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் சுவாமிகள் முன்னிலையில் முதல் திருப்பாவை பாடப் பட்டது. மார்கழி மாதம் மீதமுள்ள மற்ற நாட்களில் மூலஸ்தானம் எனப்படும் கருவறையில் வைத்து திருப்பாவைகள் பாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து ஸ்ரீஆண்டாளை தரிசித்து வழிபட்டனர். குறிப்பாக கன்னிப் பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து திருப்பாவை பாடி வழிபட்டுச் சென்றனர். ஸ்ரீஆண்டாள் இயற்றிய திருப்பாவை 30 பாசுரங்களைக் கொண்டது. இது வைணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும் இந்தப் பாசுரங்களைப் பாடி வழிபடுவது சிறப்பான பலன்களை அளிக்கும் என்பது நம்பிக்கை.





















