தொடர்ந்து சொத்துகளைப் பெருக்கும் இந்தியாவின் 1% பணக்காரர்கள்! - G20 அறிக்கை கூறு...
கேரளா: புகைபிடித்ததை தட்டிக்கேட்ட இளம்பெண்; ஓடும் ரயிலில் இருந்து மிதித்து தள்ளிவிடப்பட்ட கொடூரம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகுட்டி(19), கல்லூரி மாணவி. இவரின் தாய் பிரியதர்ஷினி பெங்களூரில் ஒரு ஸ்கூலில் நீச்சல் பயிற்சியாளராக உள்ளார். ஸ்ரீகுட்டியின் சகோதரர் ஸ்ரீகுமாரும் பெங்களூரில் வசித்துவருகிறார். ஸ்ரீகுட்டிக்கும் ஆலுவாவைச் சேர்ந்த ஒருவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. ஸ்ரீகுட்டி சில தினங்களுக்கு முன்பு தாய் பிரியதர்ஷினியை பார்க்க பெங்களூர் சென்றார். அங்கிருந்து கணவன் வீட்டுக்கு ஆலுவா சென்றுள்ளார்.
ஆலுவாவிலிருந்து திருவனந்தபுரத்துக்கு கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணித்தார். அவரின் தோழி அர்ச்சனாவும் அவருடன் ரயிலில் பயணித்தார். ரயில் வர்க்கலா ரயில் நிலையத்தை கடந்ததும் ரயில் சென்றுகொண்டிருந்தபோது ஸ்ரீகுட்டியும், அவரது தோழியும் கழிவறைக்குச் சென்றுவிட்டு வாசல் அருகே நின்றுள்ளனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பனச்சில்மூட்டைச் சேர்ந்த சுரேஷ்குமார் மதுபோதையில் இருந்ததுடன் புகைபிடித்துள்ளார்.
சிகெரெட் பிடிப்பத்த நிறுத்த சொல்லி இருக்கிறார்கள். புகைபிடிப்பதை நிறுத்தாமல் இருந்தால் போலீஸில் புகார் அளிப்போம் என மாணவிகள் கூறியுள்ளனர். இதனால் வாசல் அருகே நின்ற ஸ்ரீகுட்டியை பின்னால் இருந்து முதுகில் காலால் மிதித்து ரயிலில் இருந்து வெளியே தள்ளிவிட்டிருக்கிறார் சுரேஷ்குமார். அதைபார்த்து சத்தம்போட்ட அர்ச்சனாவையும் மிதித்தார் சுரேஷ்குமார். அர்ச்சனா சுரேஷின் காலை பிடித்ததால் வெளியே விழாமல் தப்பித்தார். உடனடியாக ரயிலில் இருந்த சக பயணிகள் அங்குசென்று அர்ச்சணாவை மீட்டனர்.

மேலும் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில் நின்றதும் ஸ்ரீகுட்டி விழுந்த இடத்தில் அவரை தேடினர். படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த ஸ்ரீகுட்டியை கண்டுபிடித்து ஆம்புலன்ஸ் மூலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீகுட்டியை மிதித்து தள்ளிவிட்ட சுரேஷ்குமாரை பயணியர் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஸ்ரீகுட்டிக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தலையில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், முதுகில் மிதித்ததால் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீகுட்டி பயணித்த ரயில் பெட்டியில் ரயில்வே போலீஸார் சோதனை நடத்தினர். ரயிலில் வைத்து ஸ்ரீகுட்டிக்கு சுரேஷ்குமார் தொல்லை கொடுத்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் போலீஸாருக்கு கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் போலீஸார் சுரேஷ்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிந்தனர்.

இதுகுறித்து ஸ்ரீகுட்டியின் தாய் பிரியதர்ஷினி கூறுகையில், "ஸ்ரீகுட்டி வென்டிலேட்டரில் சிகிச்சையில் உள்ளார். பாதி மூடிய நிலையில் அவளது கண்கள் உள்ளன. உடலில் 20 காயங்கள் ஏற்பட்டுள்ளன. தலையின் பின்பக்கமும், நெற்றியிலும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. எனக்கு எனது மகள் திரும்ப கிடைக்க வேண்டும். ஸ்ரீகுட்டி 2-ம் வகுப்பு படிக்கும்போது அவளது அப்பா என்னைவிட்டு பிரிந்து சென்றார். யாருடைய உதவியும் இல்லாமல் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்தேன். என் மகளை உயிரோடு இங்கிருந்து கொண்டுபோகமுடியுமா என தெரியவில்லை. அவ்வளவு மோசமான நிலையில் மகள் சிகிச்சையில் இருக்கிறாள்" என்றார் கண்ணீரோடு.















