ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழா: போயஸ் கார்டனில் கொண்டாடிய ரசிகர்கள் | Photo ...
திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய விகடன்; சீரமைக்கப்பட்ட தார் சாலைகள் - மக்கள் நிம்மதி!
திருப்பத்தூர் மாவட்டம், லண்டன் மிஷன் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த தார்சாலைகள் குறித்து, 11/10/2025 அன்று விகடனில், "சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும்போது அந்தத் திறந்த குழிகள் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தலாம்!" என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது.
அச்செய்தியில், பாதுகாப்பு வேலி இல்லாமல் நடைபெற்றுக்கொண்டிருந்த கால்வாய் பணி மற்றும் அப்பகுதிச் சாலையின் பரிதாப நிலை விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்தச் செய்தியைத் தொடர்ந்து, தற்போது அரசு, அப்பகுதியில் தார்சாலை அமைத்துள்ளது.
பல ஆண்டுக்கால பிரச்னை
அப்பகுதியில் தார்சாலைகள் சேதமடைந்து, இடையிடையே உருவான குழிகள் மற்றும் பள்ளமேடுகளால் பொதுமக்கள் பல ஆண்டுகளாகத் தவித்து வந்தனர். குறிப்பாக, பள்ளி-கல்லூரி மாணவர்கள், காலை நேரப் பயணிகள், பெண்கள், முதியவர்கள் என அனைவருக்கும் இது தினசரி எதிர்கொள்ள வேண்டிய அபாயமாக மாறியிருந்தது.

"இந்தத் திறந்த குழிகள் மற்றும் குண்டும் குழியுமான சாலைகள் எங்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்" என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாகக் கவலை தெரிவித்திருந்தனர்.
இந்தப் பிரச்னை குறித்து விகடன் தளத்தில் செய்தி வெளியானதும், அதற்கு மக்கள் ஆதரவும் கவனமும் கிடைத்தது. சமூக வலைதளங்களில் செய்தி பரவலாகப் பகிரப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, பின்வரும் பணிகளைத் தொடங்கி நிறைவேற்றி வருகிறது:
சேதமடைந்த தார்சாலைகளை முழுமையாக அகற்றி புதிதாக லேயர் அமைத்தல்
ஆழமான குழிகளை மூடுதல்
கழிவுநீர் கால்வாய் பகுதிகளைச் சீரமைத்தல்
சாலை பழுதுபார்ப்பு முடிக்கப்பட்டதும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், "எங்களுக்கு இதுதான் ஸ்கூல், காலேஜ் போறதுக்கு முக்கியமான வழி. ஆனா இந்த ரோடு சரியில்லாததால வேற வழி மாறி பல கிலோமீட்டர் சுத்திட்டுப் போவோம். இதுவே தினம்தினம் போராட்டமா இருந்துச்சு! ஆனா இனி அந்தப் பிரச்னை இல்லை. இனிமே தினமும் இதே வழியில நிம்மதியாவும் பாதுகாப்பாவும் போவோம்" என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்.




















