``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அன...
`3 மாத வாடகை; 7 நாளில் வீட்டை காலி செய்ய வேண்டும்’ - தாராவி செக்டர் 1 குடிசைவாசிகளுக்கு உத்தரவு
மும்பை தாராவியில் உள்ள குடிசைகள்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசையாக கருதப்படுகிறது. அக்குடிசைகளை இடித்துவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் பணி அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் மாநில அரசோடு இணைந்து தாராவியில் உள்ள குடிசைகளை ஆய்வு செய்து முடித்துள்ளது. குடிசை மாற்றுத்திட்டத்தின் கீழ் மாற்று வீடு பெற அதானி நிறுவனம் நிர்ணயித்துள்ள புதிய விதிகளால் ஆயிரக்கணக்கானோருக்கு வீடு கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குடிசை இருந்தாலும் அந்த நபர் பெயரில் ஒரு வீடுதான் கொடுப்போம் என்று அதானி நிறுவனம் கூறி வருகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தால் அந்த வீடுகளை உறவினர் பெயருக்கு மாற்றி எழுதும்படி நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு மிகவும் சொற்பமானவர்களுக்கு மட்டுமே தாராவிக்குள் வீடு கிடைக்கும் என்றும், எஞ்சிய அனைவருக்கும் தாராவிக்கு வெளியில் வீடு வழங்கப்படும் என்று கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் தாராவி மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தாராவி செக்டர் ஒன்றில் மாற்று வீடு பெற தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் இடம் பெற்று இருப்பவர்களுக்கு இப்போது நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 7 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும், அப்படி காலி செய்யவில்லையெனில் முடிசை புனரமைப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கு ஆகும் செலவை குடிசைவாசிகள்தான் கொடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்து குடிசைவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நோட்டீஸ் தாராவி செக்டர் ஒன்றில் இருக்கும் கணேஷ் நகர் பகுதி மக்களுக்கு மட்டும் முதல் கட்டமாக கொடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சாக்கடை பைப்லைன் போட இருக்கிறது. அதற்கு இடையூராக குடிசைகள் இருக்கிறது. தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டத்தை நவ்பாரத் மெகா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனம் தான் நிறைவேற்றி வருகிறது. இது குறித்து நவ்பாரத் மெகா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் பேசியபோது, `குடிசைவாசிகளுடன் வாடகை குறித்து பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் குடிசைவாசிகள் வீட்டை காலிசெய்ய மறுத்து வருகின்றனர்.
ரயில்வேயிடம் காலியாக இருக்கும் இடத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு குடிசைவாசிகள் படிப்படியாக குடியமர்த்தப்படுவார்கள். ஆனால் முதல் கட்டமாக 3500 குடிசைகள் உடனடியாக காலிசெய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அந்த இடத்தில் கழிவு நீர் பைப் அமைக்க வேண்டியிருக்கிறது. எனவே தான் கணேஷ் நகர் பகுதி மக்களிடம் வீட்டை காலி செய்ய சொல்லி இருக்கிறோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்'' என்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட குடிசைவாசி ராமிலா என்பவரிடம் பேசியபோது, ''நாங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் தற்காலிக குடியிருப்புக்கு மாற்ற மாட்டோம் என்றும், நேரடியாக அடுக்கு மாடி குடியிருப்புக்கு மாற்றுவோம் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது மாற்றுவீடு கூட கொடுக்காமல் வீட்டை காலி செய்யும்படி கூறுகின்றனர்.
ஆரம்பத்தில் வீட்டை காலி செய்ய இரண்டு ஆண்டுக்கான வாடகை கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் இப்போது வெறும் 3 மாத வாடகை மட்டும் கொடுப்போம் என்று சொல்கிறார்கள். வீட்டை காலி செய்த பிறகு மேலும் 9 மாத வாடகை கொடுப்போம் என்று சொல்கிறார்கள். மாதம் ரூ.28 ஆயிரம் வாடகை கொடுப்பதாக சொல்கிறார்கள். எங்களுக்கு மாற்றுவீடுதான் வேண்டும்'' என்றார். இதே முறையில் தாராவியின் மற்ற பகுதியில் வசிக்கும் குடிசைவாசிகளிடம் மாற்று வீடு கொடுக்காமல் வாடகையை மட்டும் கொடுத்து வீட்டைகாலி செய்ய சொல்வார்களோ என்ற அச்சம் தாராவி மக்களிடம் எழுந்துள்ளது. தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டம் ரூ.95 ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.









.jpg)









